சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட அறிக்கையில், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் இயக்கப்படும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு, கீழடியின் முக்கியத்துவத்தை புதைத்துவிட தீர்மானித்தது போல் தோன்றுகிறது. ஜனவரி 2023ல் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழாய்வு குறித்து விரிவான இறுதி அறிக்கையை சமர்ப்பித்தார். இருப்பினும், இந்த அறிக்கை தற்போது வரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
ஏனெனில், அந்த அறிக்கை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் இயக்கப்படும் மத்திய பாஜ அரசினால் புனையப்பட்ட கட்டுக்கதைகளை தோலுரிக்கிறது. இதற்காக கீழடி தொடர்பான அறிவியல் ஆய்வுகளுக்கு நேரம் தேவைப்படுவதால் தாமதமாகிறது என்று கூறி வருகிறது.
ஒன்றிய அரசு உண்மையாகவே கூட்டாட்சி முறையை மதிக்கிறதானால், கீழடி இந்தியாவின் பெருமையாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, சமஸ்கிருதம் தெற்கே வருவதற்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் எழுத்து, தொழில் மற்றும் வளமான கலாசாரம் இருந்ததை கீழடி நிரூபிப்பதால், அவர்கள் அதைத் தடுத்து, தாமதப்படுத்தி, கேள்விக்குள்ளாக்குகின்றனர். இந்த தாமதம் தற்செயலானது அல்ல என்று வில்சன் குறிப்பிட்டுள்ளார்.