Monday, June 17, 2024
Home » பதவியில் இருந்து தூக்காமல் இருக்க தாமரை தலைவர் செய்யும் தில்லாலங்கடி வேலை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

பதவியில் இருந்து தூக்காமல் இருக்க தாமரை தலைவர் செய்யும் தில்லாலங்கடி வேலை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Suresh

‘‘தேனிக்காரர் அணியினரை ரகசியமாக கண்காணிக்க உத்தரவு போட்டிருக்கிறது யாராம்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் தேனிக்காரர் அணியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்காம்.. இந்த தகவலை மலைக்கோட்டை மாநகரில் இலைக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிங்க சேலத்துக்காரரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களாம்.. தற்போது, மலைக்கோட்டையில் தேனிக்காரர் அணியில் நடக்கும் ‘பனிப்போர்’ குறித்து அவர்கள் தெரிவிச்சாங்களாம்.. தொடர்ந்து, அவர் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனிக்க அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.. இதனால, சேலத்துக்காரர் அணியினர் தேனிக்காரர் அணியினரை கவனிச்சிட்டு வருகிறார்களாம்… எனவே, தேர்தல் முடிவுக்கு பிறகு தேனிக்காரர் அணியில் மாற்றம் இருந்தாலும் ஆச்சரியமில்லை..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எலக்சன் ரிசல்ட்டுக்கு அப்புறம் பதவியில் இருந்து தூக்காமலிருக்க தாமரைக்கட்சி தலைவரு செய்யும் தில்லாலங்கடி விஷயம் பற்றி சொல்லுங்க..?’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாநில தலைவரான மாஜி போலீஸ் அதிகாரிக்கு, கட்சியில சேர்ந்தவுடன் பதவி கிடச்சது.. இதனால தலைகால் புரியாமல் வானத்தை வில்லாக வளைப்பேன் என புருடா விட்டுக்கிட்டிருந்தாரு… இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொல்லிக்கிட்டு, எப்படியாவது இலைக்கட்சியை கூட்டணியில இருந்து வெளியேத்தனுமுன்னு திட்டம் போட்டு அதனை செயல்படுத்தி வெற்றி கண்டாரு.. தனித்து நின்று அனைத்து தொகுதிகளையும் அள்ளிடலாமுன்னு மேலிடத்தை வார்த்தை ஜாலத்தால் மடக்கி அதிலும் வெற்றிகண்டாரு.. ஆனால் நடந்து முடிந்த எலக்சன்ல ஒரு தொகுதி கூட கிடைக்காதுன்னு தகவல்கள் வெளியாகியிருக்கு.. இதனால எப்படியும் ரிசல்ட் வந்தவுடன் பொறுப்பிலிருந்து தூக்கிவிடுவாங்க என்பது மாஜி போலீஸ் அதிகாரிக்கு தெரிஞ்சிப்போச்சாம்.. எலக்சனுக்கு கொடுத்த பணத்திலும் பெரும் தில்லுமுல்லு நடந்ததா கட்சிக்காரர்களிடையே ஆங்காங்கே வெட்டு குத்தாகி இருக்காம்.. இந்த சூழ்நிலைய எதிர்கொள்ள இப்பவே அவர் தயாராகிட்டாராம்.. இதற்காக இலைக்கட்சியின் மறைந்த மம்மியை டச் பண்ணி அவர் ஒரு இந்துத்துவா கொள்கை கொண்டவருன்னு வழக்கம்போல தட்டிவிட்டிருக்காரு.. இவ்வாறு பேசுவதன் மூலம் தன்னை இலைக்கட்சிக்காரர்கள் திட்டுவாங்க.. மீண்டும் அரசியலில் தான் ஒரு மாபெரும் தலைவருன்னு டெல்லி மேலிடம் நினைக்கும், தனது பதவியும் பறிக்கப்படாதுன்னு நினைக்கிறாராம்.. இந்த தில்லாலங்கடி விஷயத்தை தெரிஞ்சிக்கிட்ட இலைக்கட்சி தலைவரு, மாஜி போலீஸ்காரருக்கு எதிராக யாரும் பேசவேண்டாமுன்னு சொல்லிட்டாராம்.. ரிசல்ட் வந்தால் தானாகவே அவரது கதை முடிந்துவிடுமுன்னு கட்சிக்காரங்கக்கிட்ட சொல்லியிருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மா நகரத்தோட வருவாய், மாநகரத்தோட கஜானாவுக்கு சரிவர வருவதில்லைன்னு பேசிக்கிறாங்களாமே..’’ என்ன கதையாம் என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மா நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள்ல ரொம்ப காஸ்லியான பகுதியாக நேதாஜி மார்க்கெட்டும், சாரதி மாளிகையும் இருக்குது.. அங்க தான், மா நகரத்துக்கு கோடிகள்ல வருவாய் ஈட்டிக்கொடுக்கக்கூடிய பெரிய மார்க்கெட், வணிக வளாகங்கள் இருக்குது.. இங்க இருக்குற வணிக வளாகமும், மார்க்கெட்டும் பல வருஷத்துக்கு முன்னாடி ஏலம்விட்டு கடைகள் ஒதுக்கப்பட்டிருக்குறதாக சொல்றாங்க.. இதுல ஏலம் எடுத்த பலகடைகள் பல எல்களுக்கு கை மாறிடுச்சாம்.. அதாவது மாநகராட்சி பதிவேட்டுல ஏலம் எடுத்த நபரு ஒருத்தராவும், இப்ப கடைவெச்சிருக்குற நபர் வேற ஒருத்தராகவும் இருக்குறாங்களாம்..
கடைகள்ல உள்வாடகை விடுறது, ஆக்கிரமிப்பு கடைகள்னு மாநகராட்சி கடைகளைவிட பலமடங்கு கடைகள் ஆக்கிரமிப்பு கடைகளாகவே இருக்குதாம்.. மா நகரத்தோட வாடகையவிட உள்வாடகை பல எல்களை தாண்டுதாம்.. இப்படி பல வகையில வருமானம் வருது.. ஆனா? மா நகராட்சி கஜானாவுக்கு சொற்ப வருவாய் தான் கிடைக்குதாம்.. இதனால, மா நகராட்சியோட ஒட்டுமொத்த கடைகளை ஏலம் எடுத்தவங்க, பட்டியலை தூசி தட்டி, அவங்கதான் கடை வெச்சிருக்குறாங்களா, அப்படின்னு புகைப்படத்தோட ஒரு அடையாள அட்டைய தயார் செஞ்சி முறைகேடுகளை உடனடியா தடுக்கணும்.. அப்பத்தான் மா நகரத்தோட வருவாய் பெருகும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க.. இதுமட்டுமல்ல, மா நகராட்சியில இதுபோல தோண்டதோண்ட பல கதைகள் வரும்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மேம்பாலம், புது பஸ் ஸ்டாண்டுக்காக பல கோடி செலவழித்தும் எந்த பலனும் இல்லைன்னு மக்கள் புலம்புறாங்களாமே…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் வெற்றிலைக்கு பேர் போன ஊரில் கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது கமிஷனை மட்டும் குறிவைத்து தேவையின்றியும், உரிய திட்டமிடல் இல்லாமலும் பல பணிகள் நடந்திருக்காம்.. இந்த வரிசையில் ரூ.49 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நீண்ட இழுபறிக்கு பின் முடிந்து பயன்பாட்டுக்கும் வந்துருக்கு.. ஆனால், முறையான அளவீடு செய்யாமலும், சர்வீஸ் சாலைகள் அமைக்காமலும் வெறுமனே மேம்பாலத்தை கட்டி முடிச்சிட்டாங்களாம்.. இதனால் பாலத்தை திறந்தும் முழுவதுமா பலன் கிடைக்கவில்லையாம்.. உரிய முறையில் சர்வீஸ் சாலை அமைக்காததால் வௌியூர் பஸ்கள் வந்து செல்ல வழி இல்லையாம்.. இதேபோல இலைக்கட்சி ஆட்சியில் பல கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் மற்றும் நிழற்கூரைகள் கூட போதுமானதாக செய்யப்படவில்லை.. அவசரத்தில் பல கோடிகளை செலவிட்டாலும், அதனால் உள்ளூர் மக்களுக்கு எந்த பலனும் இல்லாமல் போய் விட்டது.. கமிஷனை குறிவைத்து இலைத்தரப்பினர் டெண்டர் பணிகளை செய்து பணத்தை வீணடித்து விட்டாங்க என்பதுதான் அப்பகுதியில் பரபரப்பு பேச்சா போயிட்டுருக்கு..’’ என முடித்தார் விக்கியானந்தா.

 

You may also like

Leave a Comment

20 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi