‘‘அந்த புள்ளி ரயில்வே ஸ்டேஷன் வந்தாலே அக்கப்போர் தான் என மக்கள் நொந்து கொள்கிறார்களாமே.. யாரந்த புள்ளி..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தென் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜ எம்எல்ஏ ஒருவர் கடந்த வாரம் அவரது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டாராம். எப்போதுமே அவர் ரயில் புறப்படும் நேரத்தில்தான் வீட்டில் இருந்து ரயில் நிலையத்துக்கே புறப்படுவாராம். இதனால் அவரது அல்லக்கைகள் 2 பேர் முன் கூட்டி சென்று ரயில் லேட்டாக சென்றால் பேசாமல் இருப்பார்களாம். புறப்பட்டால், உடனே செயினை இழுத்து ரயிலை நிறுத்தி விடுவார்களாம். அப்படித்தான் கடந்த வாரமும் செய்தார்களாம். ஸ்டேஷன் மாஸ்டர், போலீஸ் அனைவரும் வந்து விசாரித்தார்களாம். அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த பெட்டிக்கு எம்எல்ஏ வந்தாராம். இவரைப் பார்த்ததும் இது எம்எல்ஏ ஆட்களின் வேலைதான் என்று தெரிந்து கொண்டார்களாம். ஏனென்றால் எம்எல்ஏ பெட்டியில்தான் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவம் நடக்குமாம். இதனால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்தபடி சென்று விடுவார்களாம். இந்த முறையும் அப்படித்தான் சென்றார்களாம். உடனே, எம்எல்ஏவின் அல்லகை தம்புடுக்கள், எப்படி எங்க எம்எல்ஏ ரயில்வே அதிகாரிகளுக்கே அல்வா கொடுக்கிறார் பாருங்கள் என்று புளகாங்கிதம் அடைந்தார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோடிக்கணக்கான நெல் இருப்பில் வைத்துள்ள வியாபாரிகள் கிலியில் உள்ளார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக களத்திலேயே விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று கொழுத்த லாபம் பார்த்து வந்தனர். தற்போது வியாபாரிகள், மில் அதிபர்களின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் நெல்லை வாங்கி இருப்பு வைத்துள்ளவர்கள் கிலியில் உள்ளார்களாம்.. …’’ என்றார் விக்கியானந்தா.‘‘வைகை அணை பூங்காவில் பராமரிப்பு என்ற பெயரில், கடந்த ஆட்சியின்போது இலைக்கட்சியினருடன், அதிகாரிகள் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளது அம்பலமாகியிருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. இங்குள்ள வலது கரை பூங்கா மதகு பகுதியில் வாய்க்கால் வேலை, பைப் லைன் போன்ற வேலைகளுக்காக ₹31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் பைப்லைன் மட்டும் பதித்து விட்டு, வேறு எந்த வேலையும் செய்யாமல் மீதி பணத்தை இலைக்கட்சியினருடன் சேர்ந்து, அதிகாரிகளும் சுருட்டி விட்டனராம்… இடது கரை பூங்காவுக்கும் ₹35 லட்சம் நிதி ஒதுக்கி, குறைந்த தொகை பெயரளவில் செலவிட்டு, மீதிப்பணத்தை ஏப்பம் விட்டனராம்… பொதுவாக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக அரசு கால்வாய் பகுதிகளை சீரமைக்க நிதி ஒதுக்குவது வழக்கம். அந்த பணமும் வேலை செய்வது போல் காட்டிக் கொண்டு சுருட்டப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் அதிகாரிகள், இலைக்கட்சியினர் உதவியோடு கடந்த காலங்களில் நிறையவே மக்கள் பணத்தை ‘‘கை’’ வைத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஓபிஎஸ் மனைவி மரணத்துக்கு சசிகலா நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஷயம் பரபரப்பாகியிருக்காமே…’’‘‘அதைவிட பரபரப்பானது வேற விஷயம். எடப்பாடி எஸ்கேப்பான விவகாரம்தான் அது. ஓபிஎஸ் மனைவி மரண செய்தி அறிந்ததும் பெருங்குடி மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறினார் எடப்பாடி. பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும்போதும் எடப்பாடி அங்கு இருந்தார். அதன்பின்னும் மருத்துவமனையில் நின்றிருந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அப்போது அங்கு சசிகலா வந்துகொண்டிருந்தார். இந்த செய்தியை அறிந்துதான் எடப்பாடி அதிரடியாக இடத்தை காலி செய்திருக்கிறார் என்பது பின்புதான் தெரிந்தது. மதுசூதனன் மறைவின்போதும் சசிகலா வருவதை அறிந்து எடப்பாடி இப்படித்தான் எஸ்கேப் ஆனார் என சொல்லி சிரித்தார்கள் தொண்டர்கள்’’என்றார் விக்கியானந்தா. ‘‘முக்கிய ஆவணங்கள் மாயமானதாக சொல்கிறார்களே… அது என்ன மேட்டர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அறநிலையத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதில் குமரி மாவடடத்திலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட வேண்டுமாம். ஆனால் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் இது தொடர்பாக நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து உள்ளனர். இந்த வழக்கு விவகாரங்களில் அழுத்தமான ஆவணங்களை தாக்கல் செய்து நிலத்தை மீட்க வேண்டிய விவகாரங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் மவுனமாக இருந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகவே முடிந்து உள்ளதாம். இப்போது இதை எதிர்த்து நீதி மன்றத்துக்கு போக வேண்டிய நிலையில் ஆவணங்களை தேடினால் முக்கியமான ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும் பேசுகிறார்கள். இதனால் புதிதாக பொறுப்பேற்க உள்ள இணை ஆணையர் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா. …