Sunday, June 9, 2024
Home » ருசி பார்த்து விட்டு ஆர்டர் செய்யலாம்!

ருசி பார்த்து விட்டு ஆர்டர் செய்யலாம்!

by Lavanya

அண்ணா நகரில்ஒரு டிஃப்ரன்ட் உணவகம்

பொருளாதாரத்திற்காக மட்டுமே உணவகம் நடத்துபவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் தொடர்ந்து அந்த உணவகத்தை நடத்த முடியாது. ஏனெனில், மற்ற தொழில்களைப்போல உணவுத்தொழில் கிடையாது. உணவகம் நடத்துவதை ஒரு ஃபேஷனாக நினைத்தால் மட்டுமே அந்தத் தொழிலில் நீடிக்க முடியும். அப்படி உணவுத்தொழிலை ஃபேஷனாக எடுத்துக்கொண்டு, சாதிக்க வேண்டுமென்று நினைத்த இரண்டு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய உணவகம்தான் ‘கொலபசி’. சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கிற்கு அருகே இருக்கிற இந்த உணவகம், ‘கொலபசி இந்தியன் கேன்டீன்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு உணவகங்களுக்கு இணையாக தரமான முறையில் இயங்கி வரும் இந்த உணவகத்தின் வெற்றிக்கதையை தெரிந்துகொள்ள உரிமையாளர் ஆதித்யாவை சந்தித்தோம். “மக்களுக்குப் பிடித்த உணவுகளை அவர்களது விருப்பத்தின்படியே கொடுப்பதுதான் எங்கள் உணவகத்தின் ஸ்பெஷல். அதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்’’ என மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கிய ஆதித்யா, மேலும் தொடர்ந்தார்.

“நானும் எனது நண்பர் சந்தோஷும் சேர்ந்து 2013ல் நெல்சன் மாணிக்கம் சாலையில் கொலபசி என்ற பெயரில் எங்களது முதல் உணவகப் பயணத்தைத் தொடங்கினோம். அங்கு தொடங்கிய உணவகம்தான். இப்போது பல இடங்களில் அதே ஸ்டைலில் அதே உணவுகளைக் கொடுத்து வருகிறோம். எங்கள் உணவகத்தில் ஒன்லி ‘டேக் அவே’ தான் கொடுத்து வந்தோம். வாடிக்கையாளர்கள் எங்களது உணவகத்தில் உணவுகளை வாங்கிச்செல்லும் வசதி மட்டும்தான் இருக்கும். வாங்கிய உணவுகளை அவர்கள் விருப்பப்படி வீட்டிற்குக் கொண்டுசென்று சாப்பிடலாம். சென்னையில் முதன்முதலில் டேக் அவே முறையை கொண்டுவந்ததே எங்களது உணவகம்தான். அதேபோல, ஸ்விக்கி, சொமட்டோ போன்ற உணவுகள் டெலிவரி செய்யும் ஆன்லைன் ஆப்கள் வருவதற்கு முன்பே நாங்கள் எங்களது உணவகத்தில் இருக்கிற உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்தோம்.

கொரோனாவிற்குப் பிறகு ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கொலபசி ரெஸ்டாரன்டை உருவாக்கி டைன் இன் உணவு முறையைக் கொடுத்து வந்தோம். அதைத் தொடர்ந்து, அண்ணா டவரில் இருக்கும் இந்த கொலபசி கேன்டீனில் டைன் இன் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மக்கள் விருப்பம்போல அவர்களுக்குத் தேவையான உணவுகளை ஆர்டர் செய்து அமர்ந்து சாப்பிடலாம். எங்களது உணவகத்திற்கென்று, அதாவது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் சில விசயங்கள் நடைமுறையில் இருக்கிறது. முதலில் எங்கள் உணவகத்தில் தண்ணீர் பாட்டில்கள் விற்பது கிடையாது. அனைவருக்குமே இலவச தண்ணீர்தான். தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிப் பருக எங்களது வாடிக்கையாளர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதேபோல், எங்கள் உணவகத்தில் இருக்கிற உணவுகளை வாடிக்கையாளர்கள் சுவைத்துப் பார்த்துவிட்டு அவர்களுக்கு எந்த உணவு பிடிக்கிறதோ அதை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் சில பெரியவர்கள் சாப்பிடும்போது அவர்களால் ஒரு முழு சாப்பாட்டை சாப்பிட முடியாது. அதனால், அவர்களுக்கு எவ்வளவு உணவு வேண்டுமோ அவ்வளவு உணவு மட்டும் வாங்கி, வாங்கிய உணவுக்கு மட்டும் பணம் கொடுத்தாலே போதுமானது. அதாவது, குவான்டிட்டி பேஸில் ஒரு ஆளுக்கு எவ்வளவு உணவு வேண்டுமோ அவ்வளவு உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சிலர் உடல் எடையைக் குறைப்பதற்காக டயட் உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு வசதியாக, ரைஸ் இல்லாமல் இறைச்சியை மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடலாம். இப்படி பல விசயங்களை மக்களுக்காகவே கொண்டு வந்திருக்கிறோம்.உணவகத்தில் பல வகையான உணவுகள் இருக்கின்றன. சிக்கன், மட்டன், சீ ஃபுட் போன்ற அசைவ உணவுகளும், பனீர் போன்ற சைவ உணவுகளும் இருக்கின்றன. காம்போ மீல்ஸ் நமது உணவகத்தில் அனைவரும் விரும்பும் உணவு.

சிக்கன் மீல்ஸ், சீ ஃபுட் மீல்ஸ், வெஜ் காம்போ, பரோட்டா காம்போ என பல காம்போக்கள் இருக்கிறது. இதுபோக, கொங்கு ஸ்டைல் பிரியாணி இருக்கிறது. சிக்கன் சுக்கா, நீலகிரி சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன், மட்டன் பிரட்டல், ப்ரான் சுக்கா, பனீர் தவா கறி என பல வெரைட்டிகள் இருக்கிறது. ரைஸ், பிரியாணி, நெய்சோறு என வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த வகையில் பல உணவுகள் இருக்கின்றன. நமது கடையில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பது கிடையாது. மேங்கோ லஸ்ஸி, நன்னாரி சர்பத். கூல் மின்ட் போன்ற உள்ளூர் குளிர்பானங்கள்தான் இருக்கின்றன. டெசர்ட்ஸிலும் பல வெரைட்டி இருக்கிறது. நீரா பாயாசம், பீட்ரூட் ஹல்வா, மேங்கோ ப்ரட் ஹல்வா போன்ற டெசர்ட்ஸ் இருக்கிறது. குவாலிட்டியான உணவுகளை சரியான விலைக்கு கொடுப்பதுதான் எங்களது நோக்கம். அந்த வகையில் உணவின் தரமும் ருசியும் நன்றாகவே இருக்கும். நிறத்திற்காகவும் மணத்திற்காகவும் கூட உணவுகளில் எந்த விதமான சுவையூட்டிகள், நிறவூட்டிகள் சேர்ப்பது கிடையாது. நல்ல உணவுதான் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். அந்த வகையில் எங்கள் உணவகத்தை சிறந்த முறையில் நடத்தியும் வருகிறோம்’’ என மகிழ்வோடு கூறினார் ஆதித்யா.

– ச.விவேக்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்.

You may also like

Leave a Comment

7 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi