Sunday, October 6, 2024
Home » தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு தொடங்கியது!

by Suresh

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு தொடங்கியது. வி.ஏ.ஓ., வனக் காவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதவுள்ளனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவிகளில்வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். ஆனால் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுத அனுதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 8,17,702 பேர், பெண்கள் 12,18,922 பேர், மூன்றாம் பாலினத்தவர் 150 பேர் அடங்குவர். சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வை 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் எழுதுகின்றனர்.

இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று காலை தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணி வரை இருக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவை டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ளது. தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களுக்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi