Saturday, May 25, 2024
Home » ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி சுருட்டிய இலை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி சுருட்டிய இலை கட்சியினர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Dhanush Kumar

‘‘குக்கர் தலைவரை பார்த்து சேலம் விஐபியின் அணியில் உள்ள மாஜி அமைச்சர் சைலன்டான கதையை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியிலும் மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருக்காங்க. மனுநீதி சோழன் மாவட்டத்தில் சேலம்காரர் அணியை சேர்ந்த மாஜி அமைச்சரான கடைசி எழுத்தில் முடியக்கூடிய ராஜ் என்பவரும், பக்கத்து மாவட்டமான நெற்களஞ்சிய மாவட்டத்தில் தேனிக்காரர் அணியை சேர்ந்த மாஜி அமைச்சர் வைத்தியானவரும் இருக்காங்களாம். சில தினங்களுக்கு முன் வைத்தியானவரின் சொந்த மாவட்டத்தில் சேலம்காரர் அணி சார்பில் சேலம் விஐபி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு பின், 2 அணியிலும் உள்ள மாஜி அமைச்சர்கள் உச்சக்கட்ட ‘வார்த்தை போரில்’ ஈடுபட்டாங்களாம். தொடர்ந்து, வைத்தியானவரின் இல்லத்திருமண நிகழ்ச்சியில் குக்கர் கட்சி தலைவரு கலந்து கொண்டாராம். அது குக்கர் கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளதாம். மேலும், ைவத்தியானவரிடம் குக்கர் தலைமையானவர், சேலம் விஐபி ஆதரவாளரான மாஜி அமைச்சர் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தாராம். இந்த தகவல் தெரிய வந்த மாஜி அமைச்சர் சின்னமம்மி, குக்கர் தலைமையானவர் குறித்து எந்தவித விமர்சனம் செய்யாமல் திடீரென சைலண்டாக இருந்து வருகிறராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரத்துல ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல என்ன பிரச்னை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தூங்கா நகரின் வளர்ச்சிக்கு ரூ.1,120 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.300 கோடியில் பெரியார் பஸ் நிலையம் சீரமைப்பு, வைகை கரையில் சாலை, மல்டி லெவல் பார்க்கிங், வாகன காப்பகம், பழ மார்க்கெட் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதில் ஏகப்பட்ட குளறுபடிகளாம். அது மட்டுமில்லாமல் பணிக்கான டெண்டரில் பல கோடி ரூபாய் அப்போதே, இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு கமிஷனாக போய்விட்டதாம். ஸ்மார்ட் சிட்டிப் பணிகளில் பழ மார்க்கெட், நகரின் முக்கிய கோயிலை சுற்றி தளம் அமைக்கும் பணிகள் மட்டும் முடிந்துள்ளதாம். நகரின் மையப்பகுதியில் டவுன் பஸ் நிலையத்தை சீரமைப்பு செய்து, மேற்கு வெளி வீதியில் பாலம் அமைப்பதாக திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக மேற்கு வெளி வீதியை முடிட்டாங்க. பின்னர் திட்டத்தை மாற்றி பாதை இல்லாமல் பஸ் நிலையத்தை சுற்றி வரும்படி கட்டினாங்க. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் பணிகளும் அரைகுறையாம். ஏசி வசதியுடன் ரூ.45 கோடி திட்ட மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டது. ஆனால், ஏசி இருக்கா இல்லையா என்று நினைக்கும் அளவுக்கு கலையரங்கில் உட்கார்ந்தால் வியர்த்து கொட்டுகிறதாம். அப்போ ஏசி வாங்கியதாக காட்டின பில்லுக்கான பணம் எங்கே போச்சு. ஏசி என்ன ஆச்சு என்று தூங்கா நகர மக்கள் கேட்டு குடையறாங்களாம். அப்புறம் ஸ்மார்ட் திட்டத்தில் மொத்தமுள்ள 8 பணிகளில் இன்னும் 5 பணிகள் அரைகுறையாக இருக்காம். கடந்த 2 தினங்களுக்கு முன், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி, ஒன்றிய அரசின் நிதி தொடர்பான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், தூங்காநகர், மெடல், ஹனீபீ மாவட்ட தொகுதி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது இலைக்கட்சி ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிருப்தியடைந்த எம்பிக்கள், மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து எங்களிடம் அறிக்கை தர வேண்டுமென கூறியுள்ளனர். இதனால் தூங்கா நகரின் இலைக்கட்சி முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குழாய் மேலே ரோடு போட்ட ஆடியோ வைரலானது பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல லி என்று முடியுற 4 எழுத்து பிளாக் இருக்குது. இந்த பிளாக்ல இருக்குற பட்டி என்று முடியுற கிராமத்துல, 10 எல் நிதியில ரோடு போட்டிருக்காங்க. ரோடு போடுறபோது, அதுக்கு இடையூறாக இருக்குற மின்கம்பங்களையும், குடிநீர் குழாய்களையும் எடுக்கவே இல்லையாம். அப்படியே ரோடு போட்டுட்டாங்களாம். இதனால, அந்த ஏரியாவுல இருந்து ஒருத்தரு, அந்த ஊராட்சி பிரசிடெண்ட் கிட்ட புகார் செஞ்சிருக்காரு. ஆனா அவரு கண்டுக்கவே இல்லையாம். இது குறித்து எல்லோருக்கும் புகார் செஞ்சாராம் அந்த ஏரியாக்காரர். உடனே அவங்க இதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்காங்க. இதனால கடுப்பான பிரசிடெண்ட், புகார் சொன்னவருக்கு போன் போட்டு, நம்மள மீறி பிரஸ்சுக்கு போயிருக்கீங்க, அவங்களே செய்யட்டும்னு பேசுற ஆடியோ வைரலாகிட்டு வருது. இந்த ஆடியோ மேட்டர் தான் மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பரபரப்பாக பேசப்படுது…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

16 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi