டெல்லி : ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து மகளிர் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவிய குறிப்பிட்ட வீடியோவை கண்டு ராஷ்மிகா மந்தனா அதிர்ச்சி தெரிவித்த நிலையில், திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனங்களையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான டீஃப் ஃபேக் மூலம் நடிகையை ஆபாசமாக சித்தரித்து போலி வீடியோவை வெளியிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், போலி வீடியோ விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற போலி வீடியோவை உருவாக்கி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.