தொண்டாமுத்தூர்: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் யானையை பார்த்த அதிர்ச்சியில் காவலாளியான முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து பலியானார். ஊட்டியை சேர்ந்தவர் சண்முகம் (56). முன்னாள் ராணுவ வீரரான இவர், கோவை பாரதியார் பல்கலையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை 10 மணிக்கு பல்கலை. வளாகத்தில் உள்ள கேன்டீன் பின்புறம் சுற்றுச்சூழல் அறிவியல் கட்டிடத்தின் அருகே யானை பிளிறும் சத்தம் கேட்டது.
இதையடுத்து, காவலாளி சண்முகம் உள்பட 5 பேர் யானையை விரட்ட சென்றனர். அப்போது, யானை அவர்களை விரட்டியது. இதில் யானையை அருகில் பார்த்த அதிர்ச்சியில் சண்முகம் மயங்கி விழுந்தார். யானை துரத்தியதில் உடன் வந்த 4 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதில் சுரேஷ் (57) என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 5 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்துக்குள் விரட்டி அடித்தனர். பாரதியார் பல்கலைக்கழகம் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.