விருதுநகர், மார்ச் 19: நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது. மார்ச் 20 (நாளை) வேட்புமனுதாக்கல் துவக்கம், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் நிறைவு, ஏப்.19 வாக்குப்பதிவு, ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை, ஜூன் 8 தேர்தல் விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது.
இதனால் ஜூன் 8 வரை மாவட்ட தலைநகர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மனுக்களுடன் வரும் பொதுமக்கள் தங்களது மனுக்களை அலுவலக நுழைவு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட்டு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அதை தொடர்ந்து, நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்ற எண்ணத்தில், குறைகளுக்கான தீர்வு கோரி மனுக்களுடன் வந்த மக்கள் தங்களது மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.