திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.16 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 7.51 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை தொடங்கி, இரவு முழுவதும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக, 2வது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதிகாலை முதல் காலை 11 மணி வரை பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.
அதன்பிறகு, படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கியது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடன கலைஞரான பக்தர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு தலையில் தீச்சட்டி ஏந்தி பரதநாட்டியம் ஆடியபடி 14 கிமீ தூரம் கிரிவலம் சென்று வழிபட்டது வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் தரிசனத்துக்காக கூட்டம் அலைமோதியது. தேரடி வீதி வரை சுமார் ஒரு கி.மீ தூரம் தரிசன வரிசை நீண்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 1.40 லட்சம் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.