என் குழந்தைக்கு நஞ்சில்லாத பொருட்களை தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் மூலிகையில் சில பொருட்களை தயாரித்து அதனை பயன்படுத்த துவங்கினேன். பின்னர் இதனையே ஒரு சிறுதொழிலாக மாற்றினால் என்ன என்கிற எண்ணம் தோன்றியதன் விளைவே இந்த ஹெர்பல்ஸ் பொருட்கள் பிஸினஸ். அப்போது நான் வங்கி பணியாளராக இருந்தேன். பின்னர் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலிருந்தே சொந்த தொழிலாக இதனை துவங்கி தற்போது வரை வெற்றிகரமாக செய்து வருகிறேன். நான் தொழில் துவங்க முக்கிய காரணம் என் மகள் பிரீத்தி தான் என்கிறார் ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் பெண் தொழில் முனைவோராக கலக்கி வரும் சாதனா ரதி. இயற்கை மூலிகை களால் பொருட்களை தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி அதன் தனிச்சிறப்புகள் என்ன என நம்மிடம் விவரிக்கிறார் சாதனா ரதி…
உங்கள் மூலிகைப்பொருட்கள் தொழில் குறித்து சொல்லுங்கள்?
நான் என்னுடைய தொழிலை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. தொழில் துவங்கும் போது இரண்டு பொருட்களோடு மட்டுமே ஆரம்பித்தேன். இப்போது அத்தொழில் விரிவடைந்து தற்போது 40 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறேன். என்னுடைய அனைத்து தயாரிப்புகளுமே நூறு சதவீதம் இயற்கையான மூலிகைகளால் செய்யப்பட்டது. ஒரிஜினல் கஸ்தூரி மஞ்சள் தூள், மூலிகை சீயக்காய் தூள் பலவிதமான மூலிகைகள் அடங்கிய குளியல் நலங்கு மாவு , ஒன்பது வகையான சோப்புகள், முல்தானி மட்டி பவுடர், முகப்பொலிவு எண்ணெய் ஆரஞ்சு தோல் பொடி, கருஞ்சீரகப் பொடி, சளி மருந்து, இயற்கை மூலிகைகள் அடங்கிய ஹேர் வாஷ் பவுடர் என முப்பது வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறேன்.
ஸ்பெஷல் குளியல் பவுடர் குறித்து…
எங்கள் குளியல் பவுடரில் 26 விதமான இயற்கை மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் தயார் செய்து கொடுக்கிறோம். ஒவ்வொரு மூலிகையும் பல்வேறு பலன்களை தரக்கூடியது. இதில் பயன்படுத்தப்படும் செம் பருத்திப் பூ ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது, திருநீற்றுபச்சிலை பரு, கரும்புள்ளிகள் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்குகிறது. கார்போக அரிசி புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. பூலாங்கிழங்கு முகப்பருவை ஆற்றவும், சருமத்தின் நிறத்தை சமன்செய்யவும், தழும்புகள் மறையவும் உதவுகிறது. ஆவாரம்பூ உடல் துர்நாற்றத்தை நீக்கி, சருமத்தின் பொலிவை அதிகரித்து, நிறத்தை மேம்படுத்துகிறது.
நீங்கள் தயாரிக்கும் சோப்பு களின் தனிச் சிறப்புகள் என்ன?
நாங்கள் மரச்செக்கில் ஆட்டிய தரமான தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தி 26 மூலிகைகள் அடங்கிய நலங்குமாவை கொண்டு இயற்கை குளியல் சோப்களை விற்பனை செய்து வருகிறோம். இந்த சோப் உபயோகபடுத்தினால் நமது தோலில் உள்ள சருமத் துளைகள் திறக்கப்பட்டு உடலின் கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இந்த சோப்புகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உண்டு. இதில் செயற்கை வர்ணங்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை . விலங்கு கொழுப்புகள் சேர்ப்பதில்லை. இயற்கையான மூலப் பொருள்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இதில் வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதும் இல்லை. இதில் அரியவகை மூலிகைகள் பல அடங்கியுள்ளன.
கருஞ்சீரகப் பொடியின் பலன்கள் என்ன?
கருஞ்சீரகத்தோடு ஆறு வகையான மூலிகைப் பொருட்களை அரைத்து செய்த பொடி இது. இதனை மூன்று மாத காலம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் மற்றும் நீர்க் கட்டிகளை கரைக்கும். மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும். அஜீரண கோளாறுகளையும் சரிசெய்யும்.
மூலிகை சீயக்காய் பவுடர் குறித்து சொல்லுங்கள்?
எந்தவொரு வேதிப்பொருளும் கலக்காமல் 17 இயற்கை மூலிகை பொருட்களால் மட்டுமே தயாரிக்கப் படுகின்ற இந்த மூலிகை சீயக்காயை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவதால் தலையில் உள்ள அழுக்குகள் மற்றும் பிசுக்கை நீக்கும் , நல்ல முடி வளர்ச்சிக்கு உதவும், முடியைக் கருமையாக்கும், கேசத்தை சிறந்த முறையில் கண்டிஷன் செய்து பட்டுப்போல் மிருதுவாக்கும், கேசத்திற்கு ஒரு பளபளப்பை கொடுக்கும். முடி உதிர்வது, இளநரை, பொடுகு, பேன், தலையில் சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற கேசம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும். குளிக்கும் முன் இந்த மூலிகை சீயக்காயை நன்கு நீரில் குழைத்து 15 நிமிடங்கள் வரை தலையில் ஊறவைத்து, பின்னர் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
சளி மருந்து எப்படி தயாரிக்கிறீர்கள்?
இப்பொழுது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் ஒரே பிரச்சனை சளி. சித்தரத்தை, திப்பிலி,தாளிசம் முதலான பத்து வகையான மூலிகைகளை கொண்டு இந்த சளி மருந்து தயார் செய்கிறோம். இந்த சளி மருந்தை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு ஒரு கிராம் அளவும் பெரியவர்களுக்கு இரண்டு கிராம் அளவும் கொடுத்தால் சளி முழுவதுமாக கரைந்து வெளியே வந்துவிடும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது நுரையீரலில் தேங்கியுள்ள நாள்பட்ட சளியும் கரைந்து வெளியே வந்துவிடும்.
உங்கள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து சொல்லுங்கள்?
நான் தொழில் தொடங்கிய காலத்தில் இரண்டு பொருட்களை மட்டுமே தயாரித்து வந்தேன். இந்த 2024 ஆம் வருடம் அது நூறு பொருட்களாக மாற வேண்டும் என்பது எனது ஆசை, என் லட்சியம் என்று கூட சொல்லலாம். அதனோடு தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களை போல இரண்டு மடங்கு வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும் என்பதையும் கவனத்தில்கொண்டு உழைக்கிறேன். அதை நோக்கியே இந்த ஆண்டு எனது பயணம் இருக்கப்போகிறது. தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். தாய்லாந்திற்கு கூட எனது தயாரிப்புகளை வாங்கி செல்கின்றனர். இதே போன்று வருங்காலத்தில் நிறைய நாடுகளுக்கும் எனது பொருட்களை தயாரித்து அனுப்பி விற்பனை செய்ய வேண்டும். அதே போன்ற பெரிய யூனிட் அமைத்து தனிக் கடைகள் வைப்பதும் எங்கள் எதிர்கால ஆசைகளில் ஒன்று. எனக்கு இத்தொழிலில் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பது என் கணவரும் மகளும் தான். என் மகளுக்காக ஆரம்பித்த காரணத்தினாலேயே அவளுடைய பெயரையே என் புராடெக்ட்களுக்கு பிராண்டாக வைத்துவிட்டேன். அவர்கள் இல்லாமல் என்னால் இத் தொழிலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது தான் உண்மை.
பெண் தொழில் முனைவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
வாடிக்கையாளர்கள்தான் இந்த தொழிலின் ஆகச்சிறந்த மூலதனம். தரம் மற்றும் விலையில் அவர்களை திருப்தி படுத்தினால் விற்பனை தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெறும். குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே ஒரு சிறிய யூனிட் அமைத்து இத்தொழிலை சிறப்பாக செய்யலாம். என்னை போல சொந்த தொழில் துவங்க நினைக்கும் பெண்கள் தைரியமாக துணிந்து இறங்கினால் இத்தொழிலில் வெற்றி நிச்சயம் என்கிறார் ஹெர்பல்ஸ் தொழிலில் அசத்தி வரும் சாதனா ரதி. இன்றைய கால கட்டத்தில் டிஜிட்டல் விற்பனைப் பக்கங்கள்தான் மிக முக்கியம். மேலும் உங்களின் தயாரிப்பு எதுவாயினும் அதன் பலன்கள், விபரங்கள் குறித்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவிடுவதும் தேவை.
– தனுஜா ஜெயராமன்.