சேலம்: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் பெண் ஏட்டு பிரபாவதி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாமூல் வாங்கிய புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் புரோக்கர் குமரேசனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் தொடர்புடைய எஸ்.எஸ்.ஐ. மணியை விஜிலென்ஸ் போலீசார் தேடிவந்தனர்.
6 மாதமாக தலைமறைவாக இருந்த எஸ்.எஸ்.ஐ. மணி கடந்த 20ம் தேதி சேலம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ. மணியின் வீடு மற்றும் வலசையூரில் உள்ள உறவினர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அவரது வங்கி கணக்குகள் மற்றும் ஒரு சில ஆவணங்களின் விவரங்களை கேட்டறிந்தனர்.