செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ராமகிருஷ்ணா நகர், சம்பத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் பிரகாஷ் (28). இவர் சென்னை தரமணியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பிரகாஷ் தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்க்கு கடந்த 18ம் தேதி சென்றுவிட்டார்.
நேற்று அவர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.