திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே அருள்நிறை பொன்பதர் நாதர் உடனமர் தேன்மொழி அம்மன் ஆலயத்தில் 6ம் ஆண்டு 1,008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதர் கூடம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்நிறை பொன்பதர் நாதர் உடனமர் தேன்மொழி அம்மன் ஆலயத்தில், கார்த்திகை மாதம் முதல் (திங்கட்கிழமை) சோமவாரத்தை முன்னிட்டு 6ம் ஆண்டு 1,008 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.
இவ்விழாவிற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு சங்காபிஷேகம் மிகவும் விமரிசையாக நடந்தது. இவ்விழாவின் சிறப்பம்சமாக தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க, ஆண்கள் மற்றும் பெண்கள் கருவறையில் நேரடியாக சென்று சாமிக்கு தங்கள் கரங்களால் சங்காபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.