செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே கொண்டமங்கலம் கிராமத்தின் ஈசான்ய மூலையில் புராதன வரலாற்று சிறப்புமிக்க பிரணாம்பிகை சமேத ஈசான்ய தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் பழங்கால சிவாலயம் உள்ளது. காலப்போக்கில், இந்த சிவாலயம் பூமிக்குள் புதைந்து போனது. பின்னர், அக்கோயிலை தோண்டியெடுத்து, தற்போது கொண்டமங்கலம் கிராமத்தில் கரியமாணிக்க பெருமாள் கோயில் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நிர்மாணித்துள்ளனர்.
இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் திருமண தடை உள்பட சகல தோஷங்களும் நீங்கி, புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக உள்ளது. கொண்டமங்கலம் கிராமத்தில் வீற்றிருக்கும் பழங்கால ஈசான்ய தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 11ம் தேதி ஆருத்ரா தரிசன வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை ஈசான்ய தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சர்வ அலங்காரங்களுடன் பிரணாம்பிகை சமேதராக ஈசான்ய தர்ப்பாரண்யேஸ்வரர் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை பக்தி பரவசத்துடன் செலுத்தினர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஆருத்ரா தரிசனத்தையொட்டி பாதுகாப்பு பணிப்பில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.