Saturday, May 25, 2024
Home » அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஏன்?: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீர் கடிதம்

அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஏன்?: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் திடீர் கடிதம்

by kannappan

சென்னை: சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: தங்களின் 3.2.2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். அதில், மருத்துவ கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவனை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, ஆளுநர் தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக 5ம் தேதி (நேற்று) காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள். ‘நீட்’ தேர்வு ரத்து குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்ற பேரவையிலும், 8-1-2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.‘சமூகநீதி கூட்டமைப்பில் இணையஅதிமுக விரும்பவில்லை’: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில் கூறி இருப்பதாவது. கூட்டாட்சி மற்றும் சமூகநீதி கோட்பாடுகளை வென்றெடுக்க ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைக்க அனைந்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து, அந்த கூட்டமைப்பில் அதிமுக சார்பில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். ஓர் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்த கருத்துக்களை உடையவர்களை அழைத்து பேசி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது.தமிழ்நாட்டின் நலத்திற்காக, தமிழக மக்களின் நலத்திற்காக குரல் கொடுக்க அதிமுக தயங்காது. தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டின் நலன், தமிழக மக்களின் நலன் ஏதும் இல்லை. அரசியல் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என கூறியுள்ளார்….

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi