மேல்மலையனூர் : திருவண்ணாமலையில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி வாகனங்களில் இரவு, பகலாக சென்று கொண்டிருக்கின்றனர். இச்சமயத்தில் செஞ்சியில் சாலையில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கி செல்கின்றனர். நாளை மாலை நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவின் காரணமாக அதிக அளவு போக்குவரத்து புதுச்சேரி -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும்.
இதனால் காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் சாலை போக்குவரத்து சீரமைப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பக்தர்களின் பாதுகாப்பை கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் செஞ்சியில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றித்திரியும் மாடுகளினால் விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
எனவே செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து கார்த்திகை தீப திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் போக்குவரத்தை பாதுகாத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.