அக்னி வெயில் வாட்டி எடுக்கிறது. வீசும் காற்றும் அனலாக இருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள குளிர்பானக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இருந்தபோதும் எந்தக் கடையில் குளிர்பானம் சுவையாகவும், நேர்த்தியாகவும் தயார் செய்து தரப்படுகிறதோ அந்தக் கடைகளையே பலர் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் சென்னை அடையாறில் உள்ள கூல் பிஸ் ஜூஸ் கடை பல மக்களின் தேர்வாக இருக்கிறது. இரவு 10 மணிக்கு கூட இந்தக் கடையில் கூட்டம் அள்ளுகிறது. குறிப்பாக இங்கு தயார் செய்து கொடுக்கப்படும் அனைத்து ஜூஸ்களுமே சிறந்த சுவையில் இருந்தாலும். பலரின் தேர்வாக அத்திப்பழ ஜூஸ் இருக்கிறது. நாம் கேட்கும் விதத்தில் அவர்கள் ஜூஸினைத் தயார் செய்து கொடுக்கிறார்கள். மற்ற கடைகளில் இருப்பது போல் ஜூஸ் தண்ணீர் போன்று இல்லாமல் கெட்டியாக இருப்பதால் நிறைய மக்கள் இந்த கூல் பிஸ் ஸ்பாட்டைத் தேர்வு செய்கிறார்கள்.
மார்க்கெட் நெஞ்சுக்கறி சாப்ஸ்
கறி சாப்பாடு நம்முடைய பண்பாட்டோடு தொடர்புடையது. ஆடு, கோழி, மீன், நண்டு என விதவிதமான உணவுகளைச் செய்து சாப்பிட நாம் எப்போதும் விரும்புவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கைமணம் போல ஒவ்வொரு ஊர்க்காரர்களும் ஒவ்வொரு விதமாக உணவுகளைச் சமைப்பார்கள். அந்த வகையில் சென்னை தி.நகரில் உள்ள பசும்பொன் உணவகத்தில் மதுரை ஸ்டைல் உணவுகள் ரொம்ப ஃபேமஸ். இங்கு தயார் செய்து கொடுக்கப்படும் மார்க்கெட் நெஞ்சுக்கறி சாப்ஸ் அல்டிமேட்டாக இருக்கும். எலும்பை நல்லா கடிச்சு சாப்பிடனும்னு நினைப்பவர்களுக்காகவே இந்த டிஷ்ஷை அவர்கள் கொடுத்து வருகிறார்கள். இந்த டிஷ் சாப்பாடு, தோசை, பரோட்டா என அனைத்திற்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
சுறா கட்லெட்
கிழங்கில் செய்த கட்லெட்டை நாம் சாப்பிட்டு இருப்போம். அதேபோல பட்டாணியில் செய்த கட்லெட் சாப்பிட்டு இருப்போம். நம்மில் பலருக்கு சுறாவிலும் கட்லெட் இருப்பது தெரியாது. இதன் சுவை சுறா புட்டின் ருசியையே ஓரம் கட்டிவிடும். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நெய்தல் உணவகத்தில் இந்த சுறா கட்லெட் கிடைக்கிறது. இந்த சுறா கட்லெட் தற்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிற உணவாக மாறி இருக்கிறது. மொறு மொறுவென இருப்பதால் இந்த டிஷ் மீண்டும் மீண்டும் நம்மை சாப்பிடத் தூண்டும். நெய்தல் உணவகம் சுறா கட்லெட்க்கான ஸ்பெஷல் ஸ்பாட்டாகவே மாறி வருகிறது.