திருவள்ளூர்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் திருவள்ளுர் நாடாளுமன்ற தனி தொகுதி தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவித்தது. அதன் அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் கடந்த 23ம் தேதி அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு எண்ணிக்கைவிட கூடுதலாக 20 சதவிகிதம் அனுப்பி வைக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக, திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்றத் தேர்தல் – 2024 முன்னிட்டு மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் மற்றும் திருவள்ளுர் நாடாளுமன்ற (தனி) தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், திருவள்ளுர் நாடாளுமன்ற (தனி) தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளுர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக அனுப்பப்பட்ட 20 சதவிகிதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திங்களை தவிர்த்து இரண்டாம் கட்டமாக வாக்கு சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி நடைபெற்றது.
அதன்படி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 300 வாக்குச்சாவடி மையங்களுக்கு 396 வாக்குப் பதிவு இயந்திரங்களும், பொன்னேரி சட்டமன்ற (தனி) தொகுதியில் உள்ள மொத்த 311 வாக்குச்சாவடி மையங்களுக்கு 373 வாக்குப் பதிவு இயந்திரங்களும், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 296 வாக்குச்சாவடி மையங்களுக்கு 355 வாக்குப் பதிவு இயந்திரங்களும், பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதியில் உள்ள மொத்த 395 வாக்குச்சாவடி மையங்களுக்கு 475 வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஆவடி சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 449 வாக்குச்சாவடி மையங்களுக்கு 541 வாக்குப் பதிவு இயந்திரங்களும், மாதவரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 475 வாக்குச்சாவடி மையங்களுக்கு 574 வாக்குப் பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 2,256 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,714 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்யாபிரசாத், உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், சென்னை எல்லை சாலை திட்டம் துணை கலெக்டர் பிரியா, தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.