பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பள்ளி மாணவர்களின் சார்பாக தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியும், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனரும், தாளாளாருமான இ.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்றார்.
ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் வெண்ணிலா, பெரியபாளையம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் அலுவலர் கணேஷ் கலந்து கொண்டு, நமது இலக்கு 100 சதவிகித வாக்குப்பதிவு உறுதி மொழியை வாசித்தார். பின்னர், பெரியபாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே இருந்து மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பெரியபாளையம் வருவாய் ஆய்வாளர் கீதா, ராள்ளபாடி விஏஓ சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் இயக்குனர் எபினேசர் நன்றி கூறினார்.