மாதவரம்: வியாசர்பாடி பகுதியில் பறக்கும் படை போல் நடித்து, வாகன சோதனை நடத்தி வாலிபரிடம் ரூ.40 ஆயிரத்தை பறித்த கும்பலை சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் ஜிஎன்டி சாலை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்தர் ஜா(34). இவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 29ம் தேதி இரவு தனது பைக்கில் வியாசர்பாடி மூர்த்திங்கர் தெரு, பொன்னப்பன் தெரு வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காக்கி சீருடையில் இருந்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண், இவரை வழிமடக்கி, தங்களை தேர்தல் பறக்கும் படை எனக்கூறி, விசாரணை செய்துள்ளனர். அப்போது இவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்து, உரிய ஆவணத்தை காண்பித்து விட்டு பணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர் வியாசர்பாடி காவல் நிலையத்தில் விசாரித்தபோது, போலீசார் யாரும் வாகன சோதனை நடத்தி, பணத்தை பறிமுதல் செய்யவில்லை, என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்தர் ஜா, இதுதொடர்பாக, புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பிடித்திருந்தால் கருவூலத்தில் ஒப்படைத்து இருப்பார்கள். இருப்பினும் ரூ.40 ஆயிரம் ரூபாய் என்பதால் அவர்கள் பணத்தை பறிமுதல் செய்ய வாய்ப்பில்லை. எனவே புகாரின் உண்மைத் தன்மை குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.