உத்திரமேரூர்: ராவத்தநல்லூர் கிராமத்தில் சக்கரத்தாழ்வார் கோயில் கும்பாபிஷேகம் விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உத்திரமேரூர் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தில் சுமார் 360 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்கரராஜ கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 2 நாட்களாக கோயில் வளாகத்தில் வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.
அதைத்தொடர்ந்து, நேற்று காலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜை முடிந்தபின், மேளதாளங்கள் முழுங்க வானவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க கும்பாபிஷேக விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில், ராவத்தநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.