சென்னை: தென் சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம், என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்க பெண்கள் உதவி மையத்தை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதில் ஒருங்கிணைந்த சேவை மையம், பெண்கள் உதவி மையம் (181) போன்றவை உள்ளது. மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் தொகுப்பூதிய, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வழக்கு பணியாளர்கள் 3 காலிப்பணியிடங்களுக்கு சமூக பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரை சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000. பாதுகாப்பாளர் ஒரு காலிப்பணியிடத்துக்கு அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராகபணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரை சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,000. பன்முக உதவியாளரில் 2 காலிப்பணியிடங்களுக்கு ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400. chennai.nic.in என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் வரும் 13ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.