திருவள்ளூர், ஜூலை 27: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட், விழுப்புரம் கோட்டத்தின் மூலம் வருகிற 29ம் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூரிலிருந்து திருத்தணிக்கு 80 பேருந்துகளும், அரக்கோணத்திலிருந்து 45, காஞ்சிபுரத்திலிருந்து 35, திருப்பத்தூரிலிருந்து 35, குடியாத்தத்திலிருந்து 30, ஆரணியிலிருந்து 30, திருப்பதியிலிருந்து 20, சென்னையிலிருந்து 25, திருவண்ணாமலையிலிருந்து 15, அரக்கோணத்திலிருந்து 7 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருத்தணி வழியாக செல்லும் (வழி) 30 பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி வழியாக திருப்பதிக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இது தவிர சித்தூர், திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, பள்ளிப்பட்டு, புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்தும் திருத்தணிக்கு மொத்தமாக 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து தேவையெனில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
Karthik Yash
பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ வழித்தடத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ₹1.74 கோடியில் ஒப்பந்தம்
பூந்தமல்லி, ஜூலை 27: பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ₹1.74 கோடிக்கு கையெழுத்தாகியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஆர்வி அசோசியேட் நிறுவனத்திற்கு ₹1.74 கோடி கையெழுத்தானது. இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. முழு நீளத்திற்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தி மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
நவம்பர் 2024ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும். இதற்கான ஏற்பு கடிதம் ஆர்வி அசோசியேட் நிறுவனத்திற்கு கடந்த ஜூன் 11ம் தேதி வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ், ஆர்வி அசோசியேட் நிறுவனத்தின் துணைத் தலைவர் கலீல் பாஷா மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணி, ஜூலை 27: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு என்று போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளில் நடைபெறும் திருப்படி திருவிழாவிற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்தாண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை முதல் 31ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கடந்த 23ம் தேதி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ₹200 ஐ குறைத்திட வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் திருக்கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வரின் ஆணைப்படி, திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி நுழைவுக் கட்டணம் ₹200 ஐ குறைத்து ₹100 ஐ நடைமுறைப்படுத்திட ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் முருகன் கோயிலுக்கு ₹4 லட்சம் வெள்ளி குடை காணிக்கை
திருப்போரூர், ஜூலை 27: திருப்போரூர் முருகன் கோயிலுக்கு, சென்னை பக்தர் ₹4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி குடையினை காணிக்கையாக வழங்கினார். திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த வெங்கட் என்ற பக்தர், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அவரது குழுவினருடன் வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்த வெங்கட் மற்றும் அவரது குழுவினர் 3 கிலோ 800 கிராம் எடையுள்ள வெள்ளி குடையுடன் திருப்போரூர் மாட வீதி வலம் வந்து முருகன் கோயிலுக்கு, வெள்ளிக் குடையினை காணிக்கையாக கோயில் நிர்வாகத்தினரிடம் நேற்று மாலை வழங்கினர். பின்னர், அபிஷேகம் செய்து வழிபட்டனர். இந்த, வெள்ளி குடையின் மதிப்பு ₹4 லட்சத்து 4 ஆயிரம் என தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
காஞ்சிபுரம், ஜூலை 27: காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு நடத்ததுவதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ள நிலையில் மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். அவருக்கு எதிராக எதிர் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். இந்நிலையில், மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் மனு அளித்தனர். மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.
இதனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர் சிந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மாநகராட்சி கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க மேயருக்கு உத்தரவிட வேண்டும்.
கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம், காஞ்சிபுரத்தில் சாலை, குடிநீர் மற்றும் சாக்கடை பிரச்னைகளை சரி செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி ஆணையர் மேயருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேயருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொத்தாம் பொதுவாக உள்ளது. பணம் வசூலித்ததாக புகார் இல்லை. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை முடித்துவைத்தார்.
மேம்பால பணியின்போது குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
செங்கல்பட்டு, ஜூலை 27: சிங்கபெருமாள் கோவில் அருகே மேம்பாலப் பணியின்போது குடிநீர் குழாய் உடைந்ததால் பல லட்சக்கணக்கான லிட்டர் சாலையில் ஆறாக ஓடியது. சிங்கபெருமாள் கோயில் பகுதியில் சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் சாலை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் சிமென்ட் குழாய்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை மேம்பால பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக குடிநீர் குழாய் உடைந்தது. இதில், சிமென்ட் குழாயில் இருந்து 50அடி உயரத்திற்கு வானத்தை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை தண்ணீரில் நனைந்தபடி சென்றனர். குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. பைப்லைன் உடைப்பு குறித்து மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வால்வுகளை அடைத்து தற்காலிகமாக குழாய்களில் வரும் குடிநீர் வெளியேறுவதை நிறுத்தினர். அதனைத்தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது. பைப்லைன் உடைப்பு காரணமாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது.
கஞ்சா வழக்கில் கைதான 13 பேர் வங்கி கணக்கு முடக்கம் வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களில்
வேலூர், ஜூலை 27: வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் கஞ்சா வழக்கில் கைதான 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில எல்லைப்பகுதிகளில் போலீசார் குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மாநிலத்தில் கஞ்சா விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகளை முடக்க டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்துவோரை கைது செய்து, குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதானவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று முன்தினம் (25ம் தேதி) வரை 10 நாட்களில் மொத்தம் 12 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் சஸ்பெண்ட் வேலூர் எஸ்பி அதிரடி டோல்கேட்டில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்
வேலூர், ஜூலை 27: பள்ளிகொண்டா டோல்கேட்டில் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியானதால் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் ஆகிய இருவரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் வழியாக ரேஷன் அரிசி, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்திச்செல்லப்படுகிறதா என போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவார்கள். மேலும் விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் செல்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா காவல் நிலைய 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் இருவரும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி தகவலறிந்த எஸ்பி மணிவண்ணன், விசாரணை நடத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில், போலீஸ்காரர் சங்கரும், ஊர்க்காவல் படை வீரர் நவீனும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மணிவண்ணன் நேற்று அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெந்நீர் கொட்டி 2 குழந்தைகள் காயம் அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட்
குடியாத்தம், ஜூலை 27: குடியாத்தத்தில் 2 குழந்தைகள் மீது வெந்நீர் கொட்டி காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டையில் தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவை சமைத்தனர். அப்போது, அங்கன்வாடி பணியாளர் துர்கா என்பவர் தண்ணீர் எடுப்பதற்காக மைய கட்டிடத்தில் இருந்து வெளியே சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த வெந்நீர் கீழே கொட்டி அருகில் நின்று கொண்டிருந்த 2 குழந்தைகள் மீது பட்டது. இதனால் காயமடைந்த குழந்தைகள் இருவரும் அலறி துடித்தனர். அலறல சத்தம் கேட்டு ஓடி வந்த பணியாளர்கள் குழந்தைகளை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் சித்ராதேவி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதில், அங்கன்வாடி மையத்தில் சமையலறை தனியாக இல்லாமல், குழந்தைகள் அமரும் இடத்திலேயே உணவு சமைப்பது தெரியவந்தது. ெதாடர்ந்து, வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, அங்கன்வாடி மைய கட்டிடம் மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். அதன்படி, அதே பகுதியில் உள்ள வேறொரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் அங்கன்வாடி மையம் நேற்று மாற்றப்பட்டது. இதற்கிடையில், கவன குறைவாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தொழில்களை தொடங்க முன்வருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலெக்டர் தகவல் உணவு மற்றும் வேளாண்மை தொடர்பான
திருவண்ணாமலை, ஜூலை 27: திருவண்ணாமலை மாவட்டத்தில், உணவு மற்றும் வேளாண்மை தொடர்பான தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் (சிஐஐ) சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அதில், சிஐஐ சென்னை மண்டல மேலாண்மை இயக்குநர் மிலன்வாஹி,சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆர்.வி.சாரி. மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி மற்றும் வர்த்தர்கள் சங்க நிர்வாகிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
அப்போது, தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தை தொடங்கி வைத்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், தொழில் வளத்தில் பின்தங்கியிருக்கிறது. எனவே, இந்த மாவட்டத்தில் தொழில் வளத்தை பெருக்க தேனையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசும், மாவட்ட நிர்வாகமும் தயராக உள்ளது. இந்த மாவட்டம் வேளாண்மையை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கிறது. எனவே, உணவு மற்றும் வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தொழில்களை தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். தனி நபராக மட்டுமின்றி.
குழுவாக இணைந்தும் தொழில்களை தொடங்கலாம். தொழில் தொடங்குவதற்கான அனுமதியை ஒற்றை சாளர முறையில் வழங்க அரசு தயராக இருக்கிறது. அதனால், பல்வேறு துறைகளின் அனுமதிகளையும் எளதில் பெற முடியும். தொழிற்சாலைகள் தொடங்கினால், அதைச்சார்ந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும். அதோடு, அந்த பகுதியின் பொருளாதாரம் மேம்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில், தொழிற் சார்ந்த பட்டய மற்றும் பட்டப் படிப்புகளில் மாணவர்களை ஊக்குவிக்கவும் தேனையான முயற்சிகள் செய்து வருகிறோம். எனவே, இதுபோன்ற மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளை வழங்க முன்வரும் திட்டங்களை, திருவண்ணாமலை மாவட்ட தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்காக அரசு தரப்பில் வழங்கப்படும் கடனுதவி, மானியம், தொழில்நெறி வழிகாட்டுதல் போன்றவை குறித்து மாவட்ட தொழில் மையம், சிட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, தாட்கோ போன்ற துறைகளின் சார்பில் விளக்கப்பட்டது.