ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21வயது பெண். இவரது கணவர் கன்ஹா கமேதி. இந்த பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் குடும்பத்தை பிரிந்து வேறு ஒரு நபருடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மாமியார் வியாழன்று அவரை சொந்த கிராமத்துக்கு கடத்தி வந்துள்ளார். பின்னர் அவளது கணவர் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து சித்ரவதை செய்து நிர்வாணமாக்கி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அசோக் கெலாட் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘இதுபோன்ற சம்பவங்களுக்கு நாகரீக சமூகத்தில் இடமில்லை. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெண்ணின் கணவர் கன்ஹா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கன்ஹா உட்பட தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவானர்களை கைது செய்வதற்காக 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் தொடர்புடையதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.