நெல்லை: பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் உட்பட 14 போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சரகத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய ஏஎஸ்பி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் மீது புகார்கள் எழுந்தது.
சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஏஎஸ்பி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்ஐக்கள் முருகேசன், இளையராஜா உட்பட 15 பேர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 15 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகலும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தவிர ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 14 பேர் ஆஜராகினர். ஆனால் மாஜிஸ்திரேட் திரிவேணி விடுமுறையில் இருப்பதால் இவ்வழக்கு ஜன.10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 14 பேர் நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானதால் பரபரப்பு நிலவியது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.