மதுராந்தகம்:மதுராந்தகத்தில் விசிக சார்பில் கீழ்வெண்மணியில் பட்டியல் இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட 55ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தஞ்சை கீழ்வெண்மணி கிராமத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பட்டியல் இன வேளாண் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட 55ம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதுராந்தகம் நகரில் வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள அம்பேத்கர் முழு உருவ சிலை திடலில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். மதுராந்தகம் நகர செயலாளர் அ.கிட்டு பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கதிர்வாணன், தயாநிதி, சமத்துவன், சீனு, நிர்வாகிகள் பேரறிவாளன், அன்புச்செல்வன், பார்த்தசாரதி, தலித் எழில்மலை மகாதேவன், சம்பத், தினகரன், ஆசிரியர் மூர்த்தி ஆகியோர் தியாகிகளின் திருவுருவ படத்திக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் விசிக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.