புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருந்தபடியே அவர் தனது பணிகளை அவர் செய்து வருகிறார். இந்நிலையில், கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்க கோரி விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் அரோரா அடங்கிய அமர்வு முன் இது விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘ சமீபத்தில் இது போன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.