புதுடெல்லி: மேற்குவங்கத்தின் 42 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கூச்பெஹார் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியும், பிரதமர் மோடியும் பிரசாரம் மேற்கொண்டனர். இதனிடையே பிரதமரின் மேற்குவங்க பிரசாரம் குறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “மேற்குவங்கத்தில் 2021 பேரவை தேர்தலுக்கு முன் அந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி 22 முறை பயணம் சென்றார். ஆனால் அதன் பிறகு நாடு முழுவதும் செல்லும் மோடி ஒருமுறை கூட மேற்குவங்கத்துக்கு போகவில்லை. தேர்தலில் பாஜ தோற்று போனது. இதற்காக அந்த மாநில மக்களை பிரதமர் மோடி பழி தீர்த்து கொண்டார். மேற்குவங்கத்துக்கு நிதியை தர மறுப்பது ஏன்? நலத்திட்டங்களுக்கான நிதியை அற்பத்தனமாக பாஜ அரசு நிறுத்தி வைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.