இந்த நவீன யுகத்திலும் அனைத்துத் துறைகளும் இயந்திரமயமாகி விட்டது. விவசாயம் மட்டும் விதிவிலக்கா என்ன? விவசாயத்தின் பல பணிகள் இப்போது இயந்திர மயமாகி விட்டன. உழவு தொடங்கி அறுவடை வரை அனைத்துப் பணிகளுக்கும் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. இதனால் பராமரிப்புப் பணிகள் வெகு எளிதாகிவருகின்றன. மற்ற பயிர்களுக்கு எப்படியோ நெல் சாகுபடிக்கு தற்போது இயந்திரப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. முன்பெல்லாம் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகிவிட்டால், 10 பேர் தேவைப்படும் இடத்தில் 50 பேருக்கு மேல் அறுவடைப் பணிக்காக வருவார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அறுவடைப் பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் முழுக்க முழுக்க இயந்திரங்களின் துணைதான் கைகொடுத்து வருகிறது. ஆனால் பல இடங்களில் நெல் அறுவடைப்பணிகளுக்கான இயந்திரங்களுக்கு அதிகளவில் வாடகை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்திருக்கிறது.
“கடலூர் மாவட்டத்தில் 2024ம் ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துகளை கேட்டறிந்ததன் அடிப்படையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகைத் தொகையினை நிர்ணயம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி 2024ம் ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய, பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2.600 எனவும், டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,900 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.எனவே நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடைப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை கடைப்பிடிக்காமல் அதிக வாடகை கோரும் இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை கோரி சம்பந்தப்பட்ட பகுதி வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது’’ என கடலூர் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.