Sunday, October 6, 2024
Home » பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கண்காணிக்க சில எளிய வழிகள்!

பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கண்காணிக்க சில எளிய வழிகள்!

by Porselvi

நாம் எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும், அதற்காக செய்யும் செலவில் பெரும்பங்கு பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளுக்கே போகிறது. சில வகையான பூச்சிகள் நிரந்தரமாக பயிர்களைத் தாக்குவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவது மிக அவசியம். சில வகையான பூச்சிகள் சில மாதங்களில் மட்டுமே பயிர்களைத் தாக்கும். ஆனால் அதிலும் சேதம் அதிகமாக இருக்கும். எனவே அவற்றையும் நாம் முறையாக கட்டுப்படுத்த வேண்டும். இதனால் பயிர்களைத் தாக்கும் பூச்சி, நோய்களின் வகைகள் என்ன? அவை எந்த மாதம்? எப்படி தாக்கும்? பூச்சிகளின் எந்தப் பருவம் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும்? அவற்றை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை விவசாயிகள் கட்டாயம் தெரிந்துகொண்டால்தான், அவற்றைக் கட்டுபடுத்துவது எளிதாக இருக்கும். இல்லையென்றால் பயிர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட பின்தான் நமக்கு பூச்சியின் பாதிப்பு தெரிய வரும். எனவே பூச்சி நோய்கள் தற்போது விவசாயிகளின் வயலில் எந்த அளவில் உள்ளது? எப்போது பாதுகாப்பு முறைகளைத் துவக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பூச்சி நோய் கண்காணிப்பு மிக அவசியமாக இருக்கிறது.

பூச்சி, நோயை எப்படி கண்காணிப்பது?

உங்கள் பயிரில் என்ன வகையான பூச்சி, நோய்கள் தாக்கியுள்ளன? எந்த அளவிற்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது? பூச்சி, நோய் தாக்குதல் தோன்றுவதற்கும், பரவுவதற்கும், வானிலைக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? புதிய பூச்சிகள் வந்திருக்கிறதா? இயற்கை எதிரிகள் உள்ளனவா? மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப பூச்சிநோய் தாக்குதல் உள்ளதா? தொடர்ந்து பூச்சி, நோய் ஒரே இடத்தில் வருகிறதா? என கண்காணிக்க வேண்டும்.

நிரந்தர வயல் கண்காணிப்பு

ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள வயலில் 5 இடங்களில் ஒரு சதுர மீட்டர் அளவுள்ள 5 பாத்திகளை அடையாளம் காணவேண்டும். நான்கு பாத்திகள் வயலின் நான்கு மூலைகளிலும் சுமார் 3 மீட்டர் தள்ளி இந்தப் பாத்திகளை அமைக்க வேண்டும். ஒரு பாத்தியை வயலின் நடுவிலும் அமைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் இந்த பாத்திகளில் உள்ள செடிகளில் உள்ள 20 செடிகளில் மொத்தம் 100 செடிகளில் கண்காணிப்பு செய்யப்படவேண்டும்.ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 20 செடிகள் இல்லையென்றால் வயலின் நான்கு மூலைகளிலும் மற்றும் நடுப்பகுதியிலும் ஆக 100 செடிகளில் ஒவ்வொரு வாரமும் கண்காணிப்பை மேற்கொள்ளவேண்டும்.

சுற்றித்திரி கண்காணிப்பு

வாரம் ஒரு முறை ஒரு வேளாண் அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள 4 கிராமங்களில் உள்ள 2 வயல்களில் பூச்சி நோய் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வயலின் தென்மேற்கு மூலையில் துவங்கி வயலின் குறுக்காக நடந்து 100 செடிகளில் பூச்சி நோய் கண்காணிக்கப்பட வேண்டும்.ஒரு மூலையிலிருந்து முதல் 10 மீட்டர் வரையில் செடிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது. அதேபோல் முடிவிலும் 10 மீட்டரில் உள்ள செடிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது.

பூச்சிகளின் எண்ணிக்கையைக் கண்டறியும் முறை

ஒரு பயிரில் ஏற்படும் சேதமானது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பயிரில் பூச்சி எண்ணிக்கை குறைவாக காணப்படும்போது அதனால் ஏற்படும் இழப்பும் குறைவாகவே இருக்கும்.சில சமயம் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் தகுந்த காலநிலையின் காரணமாக திடீரென அதிகமாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே பூச்சிகளை நிரந்தரமாக வாரம் ஒருமுறையாவது கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு வயலில் இருக்கும் அனைத்து பூச்சிகளை எண்ணுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகையால் பாத்திகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து அந்தப் பூச்சியின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். பெரும்பாலும் புழுக்கள், முட்டைக்குவியல்கள், இளம் பூச்சிகள், வண்டுகளின் எண்ணிக்கை போன்றவை பயிர்களில் சேதத்தை விளைவிக்கும். எனவே பூச்சிகளின் குணாதிசயங்களைப் பொறுத்தும் பயிர்களின் வளர்ச்சி நிலைகளைப் பொறுத்தும் சேதத்தை கணக்கிட வேண்டும்.

கை வீச்சு முறை

ஒரு வட்ட வடிவ வலையினை கைப்பிடியுடன் தயாரித்து டென்னிஸ் பேட் போல தயாரித்து அரை வட்ட வடிவில் காற்றில் வீசலாம், 10 வீச்சுகள் போதுமானது. இந்த வீச்சு 100க்கு சமம். பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கக் கூடிய வண்டுகள், நாவாய்ப் பூச்சிகள், தத்துப்பூச்சிகள் போன்றவற்றின் எண்ணிக்கையை இந்த முறையில் நிர்ணயிக்கலாம்.

கூண்டுகளைப் பயன்படுத்துதல்

ஒரு குறிப்பிட்ட கூண்டுகளை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் தயாரித்து, பயிர்களின் மேல் வைத்து, அதில் சிக்கும் பூச்சிகளை நிர்ணயிக்கலாம். தத்துப்பூச்சிகள், நாவாய்ப்பூச்சி போன்ற பூச்சிகளின் எண்ணிக்கையை இதுபோன்று நிர்ணயிக்கலாம்.

விளக்குப்பொறி

சில பருவங்களில், சில பூச்சிகள் அதிகளவில் தாக்க வாய்ப்பு இருக்கும். வெளிச்சத்தினை நோக்கி செல்லும் அந்துப்பூச்சிகளை விளக்குப்பொறி வைத்தும் கண்காணிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் நச்சு கவர்ச்சிப்பொறிகளை வைத்தும் பூச்சிகளைக் கவரலாம். பழ ஈக்களின் தாக்குதல், பருத்தி காய்ப்புழுக்களின் தாக்குதல் போன்றவற்றை அதற்கான இனக்கவர்ச்சிப்பொறி வைத்து அவற்றினைக் கவர்ந்து எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம். நேரடியாக சில சமயம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பரப்பில் உள்ள பயிர்களில் உள்ள பூச்சிகளை நேரடியாக எண்ணி மொத்த பரப்பில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம். உதாரணத்திற்கு கம்பளிப் புழுக்கள், காவடிப் புழுக்கள், பெரிய அளவிலான பூச்சிகள் கண்ணுக்கு நன்றாக தெரியும் பூச்சிகளை இது போன்று நாம் நிர்ணயிக்கலாம்.

– வி.குணசேகரன்
வேளாண்மை துணை இயக்குநர்,
உழவர் பயிற்சி நிலையம் – தர்மபுரி.

You may also like

Leave a Comment

eleven + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi