புதுடெல்லி: கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட வில்லை. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் அசோக் சிங் போட்டியிடுகிறார்.
மூத்த வழக்கறிஞரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி, இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடுகிறார். தெலங்கானாவைச் சேர்ந்த ரேணுகா சவுத்ரி மற்றும் அனில்குமார் யாதவ், அஜய் மக்கன், சையத் நசீர் உசேன், ஜி.சி.சந்திரசேகர் ஆகியோர் கர்நாடகாவில் போட்டியிடுகின்றனர். பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் சந்திரகாந்த் ஹண்டோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேற்கண்ட வேட்பாளர்கள் பட்டியலில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைமை அவருக்கு சீட் தரவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்களாக கமல்நாத் பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.