செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நேற்று நடைபெற்றது. இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாஜிதா பேகம் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பனையூர் மு.பாபு எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியகையில், “இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க கலைஞர் விரும்பினார்.
ஆகவே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையை உருவாக்கி, இந்தியாவில் முதல் முறையாக இத்திட்டத்தை செயல்படுத்தியவர் கலைஞர். அனைத்து கர்ப்பிணிகளும் கலந்துக்கொண்டு, அதிகாரிகள் சொல்லும் ஊட்டச்சத்து உணவு வழிமுறைகளை பின்பற்றி நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருங்கள். தொடர்ந்து குழந்தைகளுக்கென பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது நமது திராவிட முன்னேற்ற கழக அரசு. நமது அரசு எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும். நீங்களும் அரசுக்கு துணை நில்லுங்கள்’’என்றார்.
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ பனையூர் மு.பாபு அவரது சொந்த செலவில் பழங்கள், பாதம், முந்திரி, நெய், பேரிச்சம்பழம் உள்ளடக்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர். இதேபோல், சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, கூட்டமைப்பு தலைவர் நிர்மல் குமார், கவுன்சிலர்கள் நாகப்பன், குப்பன், இணைமதி கண்ணன், சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர்கள் குமுதா மதுரை, கண்ணன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி, சந்தோஷி, செவிலியர் கல்லூரி உதவி பேராசிரியர் கலைமகள், வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.