ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் நடந்து சென்ற தனியார் கம்பெனி ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 5 சவரன் செயின், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (28). இவர், பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இருந்து பழைய நீதிமன்றம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சக்திவேலை பைக்கில் பின் தொடர்ந்து வந்த இருவர் சக்திவேல், கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
தங்கச் சங்கிலியை பறிக்கும்போது தவறி விழுந்த சக்திவேலின் கூச்சல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சக்திவேலிடம் விசாரணை செய்து வாகன பதிவு எண்னை பெற்றுக்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட பைக் சிவன்தாங்கல் பகுதியில் இருப்பதை கண்டறிந்த போலீசார் அங்கு நின்றிருந்த இருவரையும் மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த லோகேஷ் (19), பீமன் தாங்கள் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (18).
ஆகிய 2 பேரும், சாலையில் நடந்துசென்ற சக்திவேலிடம் செயின் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 5 சவரன் செயின், சம்பவத்துக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.