காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழாவையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம்தேதி காலை 10 மணியளவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தினை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் பச்சையப்பனன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இதனையொட்டி விழா நடைபெறும் இடத்தில் மேடை, துறைகளின் சார்பில் அமைக்கப்படும் கண்காட்சி, பயனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அமைக்கப்படவுள்ள அரங்கின் விவரங்கள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அலுவலர்களுடன் ஆலோசனை நேற்று மேற்கொண்டார். அப்போது பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், திமுக நிர்வாகிகள், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.எம்.குமார், பி.எம்.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர் வெங்கடேசன், திலகர் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.