சென்னை: மடிப்பாக்கம் பகுதியில் வெள்ள பாதிப்பால் 4வது நாளாக குடியிருப்பில் உள்ளவர்களை படகு மற்றும் பொக்லைன் முலம் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து வந்ததை கண்டு மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதை மீட்டு மடிப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர். அமைந்தகரை பாரதி நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் உடல் நேற்று முன்தினம் மிதந்து வந்தது. அமைந்தகரை போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.