கொல்கத்தா: ரீமல் புயல் காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரீமல் புயலால் தெற்கு கடலோர பகுதிகளில் 24 பகுதிகளில், 79 நகராட்சிகளில் 15,000 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2,000க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும், 337 மின் கம்பங்கள் விழுந்ததாகவும், மேலும் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயல், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே நேற்றிரவு கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக கொல்கத்தாவில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ரீமல் புயலால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகள் பல சேதமடைந்தன.
ரீமல் புயல் காரணமாக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளும் இன்று காலை மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தன. ரயில் சேவை மற்றும் விமான சேவை ஆகியவை சுமார் 20 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சீரானது.
ரீமல் புயல் காரணமாக கொல்கத்தா மாநகராட்சி 79 வார்டுகளுக்கு உள்பட்ட 24 பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 15,000 வீடுகள் சேதமடைந்தன, 2,140 மரங்கள் வேரோடு சாய்ந்தன, 337 மின் கம்பங்கள் விழுந்தன என்று மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை முன்னெச்சரிக்கையாக 2,07,060 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயல் கரையைக் கடந்த நிலையில் தற்போது நிவாரண முகாம்களில் 77,288 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜி புயல் பாதிப்பை ஆய்வு செய்தார். மேலும் ரீமல் புயல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து முதல்வர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
புயல் வலுவிழந்தாலும் அசாம் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாமின் 11 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அசாம், வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. திரிபுராவின் இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.