‘‘தேர்தலுக்கு முன்னாடியே இப்படி… ஜெயிச்சுட்டா… என்ன நடக்குமோன்னு நிர்வாகிங்க புலம்பறாங்களாமே? என்னவாம்’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தல் இன்னும் நான்கே மாசத்துல வர உள்ள நிலையில, கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்குறதுல எல்லா கட்சிக்காரங்களும் தீவிரமா இறங்கியிருக்குறாங்க.. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் யார்னு பலகட்ட பணிகள் போய்கிட்டிருக்குது. ஆனா, வெயிலூர் தொகுதியில, நான்தான் தாமரை கட்சி சார்பில் போட்டிப்போடப் போகிறேன்னு சொல்லிக்கிட்டு நீதிக்கட்சிக்காரர், கூட்டம் நடத்தி வர்றாரு.. சில நாட்களுக்கு முன்னாடி, வெயிலூர் சிட்டியில நிர்வாகிங்க கூட்டம் நடந்துச்சு. அந்த கூட்டத்துல நீதிகட்சியோட தலைவரு, நான் போன 2 முறை தேர்தல்ல தோல்வியடைஞ்சுட்டேன். ஆனா, இந்த முறை நான் நிர்வாகிங்கள நம்பமாட்டேன்.
கூட்டத்துக்கு வந்திருக்குற இளைஞர்கள், பெண்கள் பட்டாளத்தை தான் நம்பி, வரும் தேர்தல்ல நிற்கிறேன். அவர்களோட ஆதரவு இருக்குறதால, எனக்கு வெற்றி வாய்ப்பு உறுதின்னு பேசியிருக்காரு. இது அங்க இருந்த நிர்வாகிங்களுக்கு இடையில சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. கூட்டத்துக்கு ஆள் சேர்க்குறதுக்கு நாங்க தேவைப்படுறோம். ஆனா வெற்றிக்கு நாங்க காரணம் இல்லைன்னு சொல்றதா? எங்களை நம்ப மாட்டேன்னு சொல்வதான்னு அதிருப்தியில இருக்காங்களாம்.. இப்பவே இப்படின்னா, ஜெயிச்சிட்டா என்ன நடக்குமோன்னு நிர்வாகிங்க புலம்ப தொடங்கியிருக்காங்களாம்.. சில பேரை இந்த பேச்சு யோசிக்க வெச்சிடுச்சுன்னு கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலைக்கோட்டையில இலை கட்சிக்குள் அதிகரிக்கும் கோஷ்டி மோதலால் நிர்வாகிங்க கடும் அதிருப்தியில இருக்காங்களாமே’’ அதுபற்றி தெரியுமா என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் இலை கட்சிக்குள் நாளுக்குநாள் கோஷ்டி மோதல் அதிகரிச்சுக்கிட்டே வருகிறதாம். சமீபத்தில மலைக்கோட்டை மாநகருக்கு புதுசா நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளருக்கும், இலை கட்சியின் சீனியர்களுக்கும் இடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறதாம்.. இவர்களுக்குள்ள பனிப்போரால கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி மீது கடும் அதிருப்தியில இருக்காங்களாம்.
புதுசா நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளரோ தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம், தேடி வந்த பதவியை கடைசி வரையிலும் தக்கவைக்க வேண்டும். தேவையில்லாம சீனியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் அமைதியாக இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளாராம்… கட்சிக்குள்ளே கோஷ்டி பூசலால் மலைக்கோட்டையை பொறுத்தவரை கட்சி இரண்டாக உடைந்து விடக்கூடாது என நினைத்த முக்கிய நிர்வாகிங்க, இந்த கோஷ்டி மோதல் பற்றி சேலத்துக்காரர் கவனத்துக்கு உடனடியா கொண்டு சென்றாங்களாம்.. இதனால கோஷ்டி மோதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதோடு, மலைக்கோட்டை மாவட்டத்தில் கட்சியில் ஒரு மாற்றத்தை கொண்டு வர சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்… இதற்கான திரைமறைவான வேலை தீவிரமாக நடந்து வருகிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி பிரமுகருடன் கூட்டு சேர்ந்து மாதம்தோறும் பல லகரங்களை சுருட்டும் டிஎஸ்பி பற்றி சொல்லுங்கள்’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை புறநகர் காவல்துறையில `ராஜ’ என துவங்கும் ஒரு டிஎஸ்பி சமீப காலமா தர்பார் காட்டி வருகிறாராம்.. அதாவது, புறநகர் பகுதிகளில் விடியவிடிய நடக்கும் தாபா ஓட்டல்களில் சில்லிங் மது விற்பனை, கேம்ளிங் கிளப் என சட்ட விரோத செயல்கள் 24 மணி நேரமும் இடைவிடாது நடக்கிறதாம்.. இவை அனைத்தும் அந்த டிஎஸ்பி ஆசியுடன்தான் செயல்படுகிறதாம்.. இந்த சட்ட விரோத செயலில் இலைக்கட்சியை சேர்ந்த `யுவ’ என துவங்கும் பிரமுகரும் ஈடுபட்டுள்ளாராம்.. அவரும், `ராஜ’ டிஎஸ்பியும் அன்கோ போட்டு இந்த செயலில் தீவிரமாக இறங்கிட்டாங்களாம்.. இதோடு மட்டுமில்லாம, அனுமதியின்றி கேரளாவுக்கு கனிம வளத்தை கடத்துவதிலும், ரெண்டு பேருக்கும் பெருமளவில் பங்கு இருக்காம்.
இலைக்கட்சி பிரமுகருக்கு வேண்டிய லாரிகள் தமிழக எல்லையை கடந்து, கேரளாவுக்குள் நுழையும்போது யாரும் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு டிஎஸ்பி வாய்மொழி உத்தரவு வேற போட்டிருக்கிறாராம்.. இதனால, இலைக்கட்சி பிரமுகரின் வாகனங்கள் அல்லாமல் மற்ற வாகனங்கள் அந்த வழியாக சென்றால் போலீசார் கைவைக்கின்றனராம்.. முடிந்தால் சுருட்டுகிறார்கள், யாரேனும் முரண்டு பிடித்தால் வழக்கு போட்டு, அபராதம் என நடவடிக்கை பாய்கிறதாம்.. ஆனா, இலைக்கட்சி பிரமுகரின் வாகனங்களுக்கு மட்டும் பச்சை கம்பளம் விரிக்கப்படுகிறதாம். `நீ ஓடுற மாதிரி ஓடு… நான் புடிக்கிற மாதிரி புடிக்கிறேன்..’ன்னு அன்கோ போட்டு, டிஎஸ்பி மாதம்தோறும் 5 லகரத்திற்கு அதிகமாகவே சுருட்டுகிறாராம். ‘இவரல்லோ அருமை டிஎஸ்பி…’ன்னு கோவை ரூரல் போலீசில் ஒரே பாராட்டு மழையா இருக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூட்டு மாவட்ட ஊர் பெயரை தன் பேருக்கு முன்னால் அடைமொழியாக கொண்ட மாஜி மந்திரியானவர், தற்போது எம்எல்ஏவாக இருக்கிறார். இவரது மைத்துனர், ஒன்றியத்தின் தலைவரா இருக்கிறார். இவர் எப்போதும் மாஜி மந்திரியின் எம்எல்ஏ அலுவலகத்தில்தான் காணப்படுவாராம்… ஒரு எம்எல்ஏவாகவே தன்னை நினைத்துக்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் வாங்கி, குறைகளையும் கேட்பாராம்… சமீபத்தில், எம்எல்ஏ அலுவலகத்திற்கு ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனுவை கொண்டு வந்து மைத்துனரிடம் கொடுத்தாங்களாம்… அப்போ இவங்கள நிற்கச் சொல்லி புகைப்படமும் எடுத்திருக்கிறாராம்.. அந்த புகைப்படத்தை இலைக்கட்சியின் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு இலைக்கட்சியில் புதிதாக இணைந்ததாக கூறியுள்ளனர். படங்களும் வலைத்தளங்களில் வெளியானது. இதை பார்த்த அந்த அமைப்பினர், எம்எல்ஏ அலுவலகத்திற்கு சென்று கடும் வாக்குவாதம் செய்தாங்களாம்.. வலைத்தளங்கள், வாட்ஸ்அப்பில் இருந்து அந்த பதிவுகளை நீக்குமாறும் கூறியிருக்காங்க… அப்புறம் நீக்கிய பின்னரே கலைந்து போனங்களாம்.. மனு கொடுக்க வந்த கொடுமைக்கு கட்சிக்கு ஆள் புடிக்கிறாங்க பாரு…. இப்படித்தான் கட்சியை வளர்ப்பாங்க போல தெரியுது..’ன்னு புலம்பியபடியே அமைப்பினர் சென்றார்களாம்.. இதை கேள்விப்பட்ட மாஜி மந்திரி மைத்துனரை கடிந்துகொண்டதாக கட்சி நிர்வாகிங்க பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.