பெரம்பூர்: பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை பகுதியை சேர்ந்தவர் சந்துரு (22), இவர் தனது இருசக்கர வாகனத்தை ரேபிடோ எனும் ஆன்லைன் செயலியில் பதிவிட்டு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் புளியந்தோப்பு திருவேங்கட சாமி தெருவில் இருந்து ஒருவர் ஏர்போர்ட் செல்ல வேண்டும் என ரேபிடோ புக் செய்துள்ளார். இதை சந்துரு எடுத்துள்ளார்.
அதன் பிறகு அந்த நபர், தனது மனைவி புளியந்தோப்பில் உள்ள மருத்துவமனையில் உள்ளதாகவும் அவரது சிகிச்சை செலவுக்காக மருத்துவருக்கு ரூ.3000 தரவேண்டும். அதனை மருத்துவரிடம் கொடுத்துவிட்டு, மனைவியை அழைத்து விமான நிலையம் வரும்படி தெரிவித்துள்ளார். மீண்டும் சிறிது நேரத்தில் மருத்துவருக்கு மேலும் ரூ.5 ஆயிரம் தர வேண்டும். மொத்தம் ரூ.8500 கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு விமான நிலையம் வருமாறும், அங்கு வைத்து மொத்த பணத்தையும் தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரின் கூகுள் பே நம்பரையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதை நம்பி சந்துரு மர்ம நபர் அனுப்பிய கூகுள் பே எண்ணிற்கு 8,500 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பிய அடுத்த நிமிடமே ரேபிடோவில் விமான நிலையம் வரை புக் செய்த ஆர்டர் கேன்சர் ஆனது. சந்துரு உடனடியாக அந்த நபரை தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. மேலும் கூகுள் பே மூலம் பணம் செலுத்திய டாக்டரின் நம்பரும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்துரு புளியந்தோப்பு குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.