ஒடுகத்தூர், நவ.8: காதலி பேச மறுத்ததால் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் பினாயில் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வரதலம்பட்டு, ஓங்கபாடி, பிச்சாநத்தம், சென்றாயன்கொட்டாய், கரடிகுடி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பிச்சாநத்தம் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியும், அதே வகுப்பை சேர்ந்த ஓங்கபாடி பகுதி மாணவனும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வரவே இருவரையும் கண்டித்துள்ளனர்.
அதேபோல், மாணவியை 18 வயது நிரம்பியதும் உறவினருக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி மாணவி தனது காதலனுடன் பேசி பழகுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி சரிவர பேசாததால் மனவேதனையடைந்த மாணவன் நேற்று பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர், கழிவறைக்கு சென்று கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயில் எடுத்து குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது, வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த மாணவரை பார்த்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். பின்னர், ஆசிரியர்கள் மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒடுகத்தூர் அருகே காதலி பேச மறுத்ததால் 9ம் வகுப்பு பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.