பெரம்பூர்: பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களில் ரயில்வே துறைக்கு சொந்தமான பல இடங்கள் உள்ளன. இதனை ரயில்வே நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்காமல் விட்ட காரணத்தினால் பல இடங்களில் குப்பைகள் சேர்ந்து ஆங்காங்கே சிறிய குப்பை மேடுகள் போல காட்சியளிக்கிறது. அதன்படி, பெரம்பூர் லோகோ பிரிட்ஜ் பகுதியை கடந்து செல்லும்போது, அயனாவரம் செல்லும் வழியில் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் குப்பை சேர்ந்து பல நாட்களாக அப்புறப்படுத்தாமல் இருந்து வருகிறது.
மேலும் ரயில்வே ஊழியர்கள் உணவு அருந்திவிட்டு போடும் உணவு குப்பைகளும் ஆங்காங்கே உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அவ்வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் அளித்தும், குப்பை கழிவுகளை அகற்ற அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இரவு நேரங்களில் கொசு உற்பத்தியாகி அப்பகுதியை சுற்றிலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து அந்த சாலை முழுவதிலும் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.