பழநி, மே 6: பழநி பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழநி பகுதியில் உள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. இந்நிலையில் பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில் பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் கால்வாய் மூலம் புன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. விநாடிக்கு 15 கனஅடி வீதம் நேற்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் மூலம் பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், கரிக்காரன்புதூர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.