Tuesday, May 28, 2024
Home » மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.314.89 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.314.89 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

by MuthuKumar
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.05.2023) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 314 கோடியே 89 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள், மீன் வளர்ப்புக்குளங்கள், பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடங்கள் போன்ற கட்டடங்களை திறந்து வைத்தார். மீன் வளத்தை பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டம், முதுநகரில் 100 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், சி.புதுப்பேட்டையில் உள்ள மீன் இறங்குதளத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மீன் உலர்தளம் மற்றும் சாலை வசதி, லால்பேட்டை அரசு  மீன்பண்ணையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சினைமீன் குளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், கடலூரில் 5 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் மற்றும் பயிற்சி மையக் கட்டடம் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு மீன் இறங்குதளத்தில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டி-ஜெட்டிகள் மற்றும் மீன் ஏலக்கூடங்கள்,
ரோச்மா நகரிலுள்ள மீன் இறங்குதளத்தில் 9 கோடியே 91 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான நேர்கல் சுவர் மற்றும்  மீன் ஏலக்கூடம், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 120 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம்; கன்னியாகுமரி மாவட்டம், மேலமணக்குடி கிராமத்தில் 29 கோடியே 50 இலட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், தூத்துக்குடி மாவட்டம், ஜீவா நகர் (திருச்செந்தூர்) கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், இனிகோ நகர் – மீனவர் குடியிருப்பில் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம், சாலை வசதியுடன் கூடிய  மீன் இறங்குதளம் மற்றும் ஆலந்தலை கிராமத்தில் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம், சாலை வசதியுடன் கூடிய   மீன் இறங்குதளம்,
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் நீர் வழங்கல் ஏற்பாடுகளுடன் கூடிய நவீனபடுத்தப்பட்ட மாநில மீன்விதைப் பண்ணை; ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் 3 கோடியே 68 இலட்சம் ரூபாயில்  மேம்படுத்தப்பட்ட அரசு மீன் பண்ணை; தென்காசி மாவட்டம், ராமநதி அரசு  மீன்பண்ணையில் 5  கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சினைமீன் குளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள். என மொத்தம் 314 கோடியே 89 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்,  மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பன்னீர்செல்வம், நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi