பொள்ளாச்சி : கோடை விடுமுறையை முன்னிட்டு, பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் மற்றும் ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட 6 வனச்சரகங்களில் பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை ஆகிய சரகங்களில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வனத்துறைக்கு உட்பட்ட டாப்சிலிப்புக்கும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றுக்கும் சுற்றுலா பயணிகள் வந்து பொழுதை கழித்துவிட்டு செல்கின்றனர்.
இதில், டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி வனத்தின் அழகு மற்றும் வன விலங்குகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு டாப்சிலிப்பில் மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். நடப்பாண்டில், முன்கூட்டியே டாப்சிலிப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வரத்துவங்கியுள்ளனர்.
கோடை வெப்பத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, டாப்சிலிப் பகுதியில் சாரல் மழை பெய்துள்ளதால், டாப்சிலிப் சற்று குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. இதன் காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. டாப்சிலிப்பிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால் அங்குள்ள விடுதிகளும் ஆன்லைன் மூலம் முன்பதிவு தீவிரமாக நடக்கிறது.
அதுபோல, ஆழியாருக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் வர துவங்கியுள்ளனர். தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும், அதையும் பொருட்படுத்தாமல் வெளியூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆழியார் அணையில் அழகை ரசித்தும், பல சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர், ஆழியார் பூங்காவில், குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆண்டுதோறும் கோடை வெப்பம் காரணமாக ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தடைவிதிப்பு இல்லை. இந்த ஆண்டில், கோடை விடுமுறையை முன்னிட்டு டாப்சிலிப் மற்றும் ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகம் வந்து செல்வதால், வனத்துறை மூலம் கட்டன வசூல் அதிகரித்துள்ளது’’என்றனர்.