Wednesday, May 1, 2024
Home » பாலியல் தொல்லை கொடுத்த பாஜ எம்.பியை கைது செய்யும் வரை தர்ணா: மீண்டும் போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீராங்கனைகள் ஆவேசம்

பாலியல் தொல்லை கொடுத்த பாஜ எம்.பியை கைது செய்யும் வரை தர்ணா: மீண்டும் போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீராங்கனைகள் ஆவேசம்

by Dhanush Kumar

புதுடெல்லி: வீராங்களனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவரும் பாஜ எம்.பியுமான பிரிஜ் பூஷனுக்கு எதிராக, மல்யுத்த வீரர்கள், வீராங்கனையில் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ‘அவர் கைது செய்யப்படும் வரையில், இந்த இடத்தை விட்டு போக மாட்டோம். இங்கேயே போராட்டம் நடத்துவோம்,’ என்று அவர்கள் கண்ணீருடன் அறிவித்துள்ளனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள், மல்யுத்த சங்கத்தின் தலைவரும் பாஜ எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக கடந்த ஜனவரியில் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு நியமித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், கடந்த 3 மாதங்களாகியும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 7 வீராங்கனைகள் கடந்த 21ம் தேதியன்று கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷன் மீது புகார் அளித்தனர். அதன் மீது நேற்று வரையில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில், பிரிஜ் பூஷனை கைது செய்யும்படி வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யாத போலீசாரை கண்டித்தும் ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள், வீராகங்கனைகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தங்களுக்கு வாக்குறுதி அளித்து 3 மாதங்களாகியும் இன்று வரையில் பாஜ எம்.பி பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக, ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் போன்றவற்றை தொடர்பு கொண்ட போதிலும் பதில் கூறப்படவில்லை. இதனால், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த இடத்தை விட்டு போக மாட்டோம். பூஷன் கைது செய்யப்படும் வரையில் இங்கேயே உண்டு, உறங்கி போராட்டம் நடத்துவோம்,’ என்று அறிவித்தனர். அப்போது, சில வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

You may also like

Leave a Comment

15 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi