Tuesday, May 21, 2024
Home » ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம்: ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம்: ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

by Mahaprabhu

சேலம்: ஏற்காட்டில் இருந்து ஒரு தனியார் பஸ் சேலத்திற்கு நேற்று மாலை 5.30 மணியளவில் புறப்பட்டது. இந்த பஸ்சில் சுற்றுலா பயணிகள், கூலி வேலைக்கு சென்றவர்கள் என 66 பேர் பயணம் செய்தனர். பஸ்சை ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த மணி (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். 13வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பஸ்சை வளைவில் டிரைவர் திருப்ப முயன்று உள்ளார். அப்போது பஸ்சின் அச்சு முறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் காட்டுப்பகுதியில் பள்ளத்தில் பாய்ந்தது.13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் 80 அடி உயரத்திற்கு பள்ளத்தில் தாறுமாறாக ஓடி வந்த அந்த பஸ், 11வது கொண்டை ஊசி வளைவில் வந்து சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது.

பஸ் பள்ளத்தில் பாய்ந்து வந்த போது, பயணிகளின் கூக்குரல் சத்தம் மரணஓலம் போல் மலையில் எதிரொலித்தது. இந்த கோர விபத்தில், பஸ் தாறுமாறாக பள்ளத்தில் பாய்ந்த போது அதில் இருந்த பயணிகள் சிலர் பஸ்சில் இருந்து வெளியே தடுமாறி விழுந்தனர். பலர் பஸ்சின் இடிபாட்டில் சிக்கி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் ‘அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டனர்.மேலும் பயணிகள் பலர் மயங்கியபடி பஸ்சிலேயே மூச்சுத்திணறியபடி புலம்பிக்கொண்டிருந்தனர். இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 63 பேர் காயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போதிய அளவு ஆம்புலன்ஸ் இல்லாததால், அந்த வழியாக சென்ற வேன், டெம்போ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.காயம் அவர்களை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சக்கர நாற்காலிகள் மூலம், ஸ்டெக்சர் மூலமும் விரைந்து அழைத்து சென்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததில், சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் சூரமங்கலம் ஏ.சி.எம்.நகர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி (37), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (11), சேலம் கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிராம் (57) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேலும் 2 ஆண் பயணிகள் உடல் அடையாளம் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் பிருந்தாதேவி நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் டாக்டர்களிடம் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வந்து விசாரணை நடத்தினார். இந்த விபத்தால் சேலம்-ஏற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் உறவினர்கள் என ஏராளமானர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு திரண்டனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், பஸ் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து ஏற்காட்டில் தனியார் பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ஏற்காடு பஸ் விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தனியார் பஸ்சை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜனார்த்தனன் (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பஸ்சின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பஸ்சிற்கான உரிமங்கள் உள்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

twelve − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi