சென்னை: 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக யாரும் எதிர்பாராத நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு விஸ்பா மற்றும் அப்ரில்லா ஆகிய இருசக்கர வாகன நிறுவனங்கள் நடத்தும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியையும் துவக்கி வைத்தார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் துவங்கிய இந்த இருசக்கர வாகன பேரணியானது எழும்பூர் வரை நடந்தது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியை சிறப்பாக வழிநடத்தியவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவித்தார். இதை தொடர்ந்து அமைச்சர் பேட்டியளிக்கையில், ‘‘முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளை ( இன்று) அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. யாரும் எதிர்பாராத நல்ல முடிவை, அனைத்து தரப்பும் ஏற்றுக் கொள்ளும் முடிவை முதல்வரின் ஆலோசனைப்படி அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்