Friday, May 17, 2024
Home » பாஜவால்தான் 30 எம்எல்ஏக்கள் அவங்களுக்கு கிடைத்தது; 6 தலைவர்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக அதிமுக மாறி உள்ளது

பாஜவால்தான் 30 எம்எல்ஏக்கள் அவங்களுக்கு கிடைத்தது; 6 தலைவர்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக அதிமுக மாறி உள்ளது

by MuthuKumar

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தேர்தல் பரப்புரையின் போது தமிழக பாஜ தலைவரும், பாஜ வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை அட்டாக் செய்வது மட்டுமே அதிமுக தலைவர்களின் பிரதானமாக உள்ளது. என் பேச்சு பெரிய கூட்டணியை உடைத்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் நான் செய்தது ரொம்ப சரியே, கோவையில் 2019ல் அதிமுக- பாஜ இணைந்து 9 லட்சம் வாக்குகளை பெற்றது. 2014ல் அதிமுகவுடன் சேராமல் இருந்தபோதே 2019ஐ விட அதிக வாக்குகளை பெற்றது. இதனால் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும் என நான் தெளிவாக இருந்தேன். 2024 தேர்தலில் அதிமுக கூட்டணி பாஜவுக்கு பின்னடைவாக இருக்கும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தேன். மக்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. ஊழல் கட்சியுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பை பேசினால் சிரிப்பார்கள்.

அதனால் தான் பிரதமர் மோடி போன்ற பெரிய மனிதர் இருந்து பெரிய எழுச்சி ஏற்படவில்லை. நான் தலைவராக பொறுப்பேற்றதும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என கூறினேன். பாஜவின் கதவு, ஜன்னல் திறந்து இருப்பதாக கூறியது அதிமுகவுக்காக இல்லை, அது பாமக, தமாகாவுக்காக இருக்கலாம். தன்னை பெரிய ஆள் (பிக் பிரதர்) என்ற மனநிலையில் அவர்கள் தங்களுக்காக காத்திருப்பதாக நினைத்தனர். தற்போது அதிமுக 6 தலைவர்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறியுள்ளது. அதை தொண்டர்கள் விரும்பவில்லை.

பாஜவுடன் கூட்டணி வைத்ததால் தான் 30 தொகுதிகளில் அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். நாங்கள் வெற்றி பெற்ற 4 தொகுதிகளை விட அதிமுக எங்கள் தொண்டர்களின் உழைப்பால் தான் 30 தொகுதிகளில் வென்றது. அது நாங்கள் கொடுத்த கொடை, அவர்களை போல் பிச்சை என்று தரக்குறைவாக நான் கூற மாட்டேன். 2019ல் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றும் தமிழ்நாட்டில் ஏன் தோல்வியடைந்தோம். அதிமுகவின் ஊழலை நாங்கள் சுமந்தோம். தென் தமிழகத்தில் மதுரையில் இருந்து குமரி வரை அதிமுக டெபாசிட் கூட வாங்காது, நான் சவால் விடுகிறேன். அதிமுகவில் இரண்டு சமுதாயங்களுக்கு இடையே உள்ள சண்டையால் கட்சியை மொத்தமாக முடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு முதல்முறையாக அண்ணாமலை, அதிமுகவினர் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமாருக்கு அண்ணாமலை சவால்
‘ஜெயக்குமார் ஓபிஎஸ்சை எள்ளி நகையாடுகிறார், அவரது மகனை தனி சின்னத்தில் நிற்கவைத்து 1000 வாக்குகளை வாங்க முடியுமா நான் சவால் விடுகிறேன்’ என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

‘நரியை போல் புளிக்கும்னு சொல்லும் எடப்பாடி ரோடு ஷோநடத்துனா ஒருத்தரும் வரமாட்டாங்க…’
‘எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பிரஸ்மீட் மட்டுமே செய்கிறார்’ என கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது: கருத்து சொல்ல முடியாதவர்கள், நரி கதையில் திராட்சை பழத்தை நரி பறிக்க முடியாமல் அந்த திராட்சை பழம் புளிக்கும் என கூறுவது போன்றது. இபிஎஸ் அந்த நரியை போல் அந்த பழம் புளிக்கும் என கூறுகிறார். தமிழ்நாட்டில் திமுக, பாஜ இடையில் தான் போட்டி இருக்கிறது. இபிஎஸ் ரோடு ஷோ போக சொல்லுங்க. எவ்வளவு பேர் பார்ப்பார்கள் என பார்ப்போம். அவர்கள் வீதியில் வந்தால் பார்க்க யாரும் இல்லை. அதிமுக கூட்டத்திற்கு வண்டியில் ஆட்களை கொண்டு வந்து பட்டியில் அடைத்தது போல் இருக்கும். முழுசா தலைவர் பேசறத கேட்டுட்டு போனால் தான் தொண்டர்களுக்கு ₹250 கிடைக்கும். பாதியில் எந்திரிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

You may also like

Leave a Comment

14 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi