பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இத்தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார். அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மும்முனை போட்டி என்பது உண்மை இல்லை. இருமுனை போட்டிதான் நிலவுகிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. பாஜகவுக்கு எப்போதும் மூன்றாவது இடம்தான். அவர்கள் 3 முதல் 4 சதவீதம் ஓட்டு மட்டுமே வைத்துள்ளார்கள்.
அதனால், அவர்கள், எங்களுடன் போட்டி போட முடியாது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அவர்கள், எங்களுடன் கூட்டணி வைத்த காரணத்தால்தான் 4 எம்எல்ஏக்கள் வெற்றிபெற முடிந்தது. இதை, அக்கட்சி தலைவர்கள் நன்கு அறிவார்கள். இத்தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என பாஜவினர் சொல்வது எல்லாம் வெற்று பிரசாரம். இதற்கு, எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தெளிவாக பதிலளித்துள்ளார். அதனால், பாஜ பற்றி பேசி, எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.