Sunday, September 1, 2024
Home » எப்போது கைதாவார்?

எப்போது கைதாவார்?

by MuthuKumar

கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தல் நேரத்தில் சமூகவலைதளத்தில் ஆபாச வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இடம்பெற்றிருந்தன. ஹாசன் மக்களவை தொகுதி எம்பியாகவும் தற்போது பாஜ-மஜத கூட்டணி வேட்பாளராகவும் போட்டியில் இருக்கும் பிரஜ்வல் குறித்த இந்த வீடியோ சரியாக வாக்குப்பதிவு நாளில் ஹாசன் மாவட்டம் முழுவதும் வைரலானதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை திட்டமிட்டு காங்கிரஸ் கட்சியினர் தான் செய்துள்ளனர். இதன் பின்னணியில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் இருக்கிறார் என்று முன்னாள் முதலவர் குமாரசாமி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா வீடியோவில் இடம்பெற்றிருந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எஸ்ஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த பெண், என்னை யாரும் கடத்தவில்லை என்று வீடியோ வெளியிட்டதால் ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். இவை அனைத்துமே கவுரவமாக வாழ்ந்து வரும் தேவகவுடா குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என்று குமாரசாமி குற்றம்சாட்டி வருகிறார். மேலும் சிறப்பு புலனாய்வு படையினர் இவ்வழக்கை உண்மையாக விசாரிக்கவில்லை என்றும் யாரையோ திருப்திப்படுத்த வழக்கு விசாரணையை வேறு திசைக்கு கொண்டு செல்கிறார்கள் என்றும் பாஜ குற்றம்சாட்டியுள்ளது. எனவே வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

ஆபாச வீடியோ வெளியானதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மஜத, பாஜவினர் வழக்கு விசாரணையை திசை திருப்ப காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றம்சாட்டி வருகின்றனர் என்று கூறிய முதல்வர் சித்தராமையா சிபிஐ விசாரணை அவசியமற்றது என்று மறுத்துவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு படை புளுகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இருந்தும் அவர் இருக்கும் இடம் குறித்து இதுவரை தெரியவில்லை. பிரஜ்வல் இன்று இந்தியா திரும்புகிறார், நாளை திரும்புகிறார் என்று செய்திகள் பரவி வருகிறதே தவிர அவர் நாடு திரும்புவதாக தெரியவில்லை.

ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் ஒரு வேளை தனது தொகுதியில் மீண்டும் அவர் வெற்றி வாய்ப்பை பெற்றால் நாடு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவரை எஸ்ஐடி போலீசார் காத்திருப்பார்களா அல்லது வெளிநாடு சென்று அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. இதற்குள் இவ்வழக்கில் தொடர்புடைய பெண்கள் ஒவ்வொருவராக பிறழ்சாட்சியாக மாறிவருவதால் வழக்கு வலுவிழந்து வருகிறது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு இவ்வழக்கு உயிரோடே இருக்காது என்று குமாரசாமி கூறியது போன்று ஆகிவிடுமோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று 107 இலக்கியவாதிகள் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்க பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டும். அப்போது தான் இதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிவரும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi